கடந்த பத்தாண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்து வந்த எகிப்து மற்றும் துருக்கி(துரக்கியே) ஆகிய இரு நாடுகளும் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் முன்முயற்சியால் சவூதி அரேபியாவும், ஈரானும் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொண்டதோடு, தூதரகங்களை அமைப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளன. தங்கள் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சீன ஜனாதிபதி ஜின்ஜின்பிங்குடன் தொலைபேசியில் சவூதி பட்டத்து இளவரசர் உரையாடியிருக்கிறார். தனது தலையீடு இல்லாமல் இந்த இரு நாடுகளும் உறவைப் புதுப்பித்துக் கொள்வது பற்றிப் பேசியதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருந்தது.
தற்போது அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. எகிப்தும், துருக்கியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று கடந்த ஆண்டு கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. இரு நாடுகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக சாடிக் கொண்டனர். ஆனால், கடந்த சில மாதங்களாக வெகு வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான உடன்பாடு இந்த நாடுகளுக்கும் உற்சாகத்தை அளித்தது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோக்லு எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமே சோக்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறிந்து பத்தாண்டுகள் ஆன நிலையில், முதன்முறையாக இரு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டதோடு, தூதரக உறவைப் புதுப்பித்துக் கொள்வது பற்றிப் பேசினர்.
இரு நாட்களுக்கு முன்பாக, எகிப்து தலைநகர் கெய்ரோவில் மீண்டும் இரு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "இரு தரப்பிலும் தூதர்கள் மட்டத்திலான உறவுகள் புதுப்பிக்கப்படும். இது பொருத்தமான நேரத்தில் செய்யப்படும். இத்தகைய உறவு புதுப்பிக்கும் வேலையைச் செய்வதற்கான அரசியல் உறுதி இரு நாடுகளின் ஜனாதிபதிகளிடம் இருக்கிறது. அடுத்தடுத்து என்ன வேலைகளைச் செய்வது என்பது விரைவில் தீர்மானிக்கப்படும்" என்றார்கள்.
துயரத்தில் மலர்ந்த உறவு
பிப்ரவரி மாதம் துருக்கியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தத் துயரமான நேரத்தில் துருக்கிக்கு எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சோக்ரி பயணம் மேற்கொண்டார். பேரழிவைச் சமாளிக்க தேவையான உதவிகளையும் எகிப்து செய்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றதாக இந்தப் பயணம் அமைந்தது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு இது உதவியது.
இரு நாடுகளின் உறவுகள் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டால் பிற நாடுகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபியா, சைப்ரஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுடனும் புதிய உறவுகள் ஏற்படுத்தப்படும். இந்தப் புதிய நிகழ்வுகள் பற்றி அமெரிக்கா நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. விரைவில் கடுமையான எதிர்வினையை அமெரிக்கா ஆற்றும் என்று கூறப்படுகிறது.