world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பிரிக்ஸ் ப்ளஸில் இணைவோம் : இலங்கை நம்பிக்கை

பிரிக்ஸ் ப்ளஸ் அமைப்பில் இலங்கை விரைவில் இணையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்தார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சமீபத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் பொறுப்புடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் சர்வதேசக் கூட்டத்தில் இவர் பங்கேற்றார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பிரிக்ஸ் ப்ளஸில் இணைவதன்மூலம், போக்குவரத்து மற்றும் உணவுப் பாதுகாப்பில் அதிக பலன்களை இலங்கை பெற வாய்ப்புண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பிரிக்ஸ் அமைப்பில், ஜனவரி 1ஆம் தேதி சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இணைந்ததைத் தொடர்ந்து, உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சரின்  அறிக்கைக்கு சீனா எதிர்ப்பு

மே முதல் நாள் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கை  ஒன்றில்,  இவ்வாண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள தைவானுக்கு அழைப்பு விடுக்குமாறு உலக சுகாதார அமைப்பை அமெரிக்கா வலுவாக நிர்ப்பந்தித்ததாகத்  தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் மே 2ஆம் நாள் கூறுகையில், இதனை சீனா கடுமையாக எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.

உலகில் ஒரே சீனா மட்டும் உள்ளது. தைவான் சீனாவின் பிரிக்கப்பட முடியாத உரிமைப்பிரதேசம் ஆகும். தைவான் பிரச்சனை, சீனாவின் முக்கிய நலன்களின் மையத்தில் உள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் தாண்டக் கூடாத ஒரு முக்கிய சிவப்புக் கோடாகவும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.  உலக சுகாதார அமைப்பின் மாநாட்டை பயன்படுத்தி தைவான் பிரச்ச னையை  மிகைப்படுத்தவும், தைவான் சுதந்திர சக்திக்கு தவறான சமிக்கைகளை அமெரிக்கா அனுப்புவதைத் தவிர்க்கவும் நிறுத்தவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேல் தூதரக உறவை கொலம்பியா தூண்டித்தது
கொலம்பியா, மே 2ஆம் நாள் முதல் இஸ்ரேலுடன் அனை த்து தூதரக உறவையும் தூண்டிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி கஸ்தவோ பெட்ரோ மே முதல் நாள் அறிவித்தார்.

தலைநகர் பொகொடாவில்  நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்ரேலின்  தலைவர் இன ஒழிப்பை  செயல்படுத்தியதால் அந்நாட்டுடன் தூதரக உறவைத் துண்டிக்க தீர்மானித்தோம் என்று தெரிவித்தார். இன ஒழிப்பு, குறிப்பாக ஒரு முழு தேசிய இனத்தை ஒழிக்கும் காலத்துக்குத் திரும்ப முடியாது என்றும் பெட்ரோ கூறினார். இதையடுத்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காஸ், அன்றைய தினம் சமூக ஊடகத்தில், பெட்ரோவின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல்-கொலம்பிய உறவு மாறாது என்றும் அவர் கூறிக்கொண்டார்.

ஃபதாவும் ஹமாஸும்  பெய்ஜிங்கில் கலந்தாய்வு

சீனாவின் அழைப்பின் பேரில், பாலஸ்தீனத்தின் ஃபதா, ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் பெய்ஜிங்கிற்கு வருகைபுரிந்து கலந்தாய்வு மேற்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ஜியென் ஏப்ரல் 30ஆம் நாள் தெரிவித்தார். பாலஸ்தீனத்தில் நல்லிணக்கம் கொண்டு வருவது பற்றி, அவர்கள் நேர்மையாகவும் ஆழமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த கலந்தாய்வு மூலம் நல்லிணக்கத்தை நனவாக்கும் அரசியல் ஆர்வத்தை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். பாலஸ்தீனத்தில் உள் ஒற்றுமையை வலுப்படுத்துவதை முன்னேற்றுவதற்கு சீனா மேற்கொண்ட முயற்சிக்கு இருதரப்பும் நன்றி தெரிவித்தன. அத்துடன், எதிர்காலப் பேச்சுவார்த்தை குறித்தும் ஒத்த கருத்து எட்டப்பட்டது என்று லின்சியென் கூறினார்.