புதுதில்லி, நவ. 23 - பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்ததற்காக, ‘ஆஸ்கர் விருது’ வென்ற நடிகை உள்பட ஹாலிவுட் நடிகைகள் இரண்டு பேர், அவர்கள் நடித்துவந்த படங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காசா பகுதியை அழித்தே தீருவோம் என்று இஸ்ரேல் மூர்க்கமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட, பெண்கள், இளைஞர்கள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. இதனால், இஸ்ரேல் சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. காசாவின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மியா கலீபா உள்ளிட்ட பிரபலங்களும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல ஆஸ்கர் விருது வென்ற சூசன் சரண்டன் மற்றும் ஸ்கிரீம் படத்தின் நாயகி மெலிசா பாரேரா ஆகியோரும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சூசன் சரண்டன், மெலிசா பாரேரா ஆகிய இருவரையும், தங்கள் படங்களிலிருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நீக்கியுள்ளன.
ஐந்து முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும், ஒருமுறை ஆஸ்கர் விருது வென்றவருமான சூசன், ‘யுனிடட் டேலண்ட் ஏஜென்சி’ தயாரிப்பில் நடித்து வந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட சூசன், “இந்த நேரத்தில், யூதர்களாக இருக்கவே பயப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதாவது நமது நாட்டில் முஸ்லிம்கள் எப்படி பயப்படுவார்களோ அதுபோல, மேலும் அவ்வப்போது அவர்கள் வன்முறைக்கும் ஆளாகிறார்கள்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக சுதந்திரப் பாலஸ்தீனத்துக்கான முழக்கத்தை எழுப்பிய சூசன், “இஸ்ரேலுக்கு எதிராக பேசுவதில் யூதர்கள் குழப்பமடைந்துள்ளனர். நான் மதவெறிக்கு எதிரானவள். இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிரானவள்.” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், யூதர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக சூசனை படத்திலிருந்து நீக்குவதாக தயாரிப்பு நிறுவனம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்ட ஹாலிவுட் நடிகை மெலிசா பாரேராவை, ‘ஸ்கிரீம் 7’ படத்தில் இருந்து, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்பைகிளாஸ் மீடியா குரூப்’ நீக்கியுள்ளது.
மெக்ஸிகோவை சேர்ந்தவரான மெலிசா, ஸ்க்ரீம் 5 மற்றும் 7-ஆம் பாகங்களிலும், ‘இன் தி ஹயிட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து பதிவிட்ட மெலிசா, இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாகவும், காஸாவை வதம் செய்யும் முகாம்களாக மாற்றியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். மெலிசாவின் பதிவை தொடர்ந்து, அவரை ‘ஸ்க்ரீம்’ படத்தில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், “இனப்படுகொலை குறித்து தவறான உதாரணத்தை கூறி, வெறுப்பைத் தூண்டுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமுடியாது” என்று கூறியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மெலிசா, “நான் மதவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களைதான் கண்டிக்கிறேன். எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் எதிரான வெறுப்புணர்வை கண்டிக்கிறேன். வன்முறையில் மேலும் மரணம் ஏற்படாமல் அமைதி நிலவ இரவும், பகலும் பிரார்த்திக்கிறேன். தேவைப்படுபவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன்.” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.