கொழும்பு, மே 12 - இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழனன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். இலங்கை மக்களின் மாபெரும் போராட்டம் காரணமாக, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இலங்கையில் முறைப்படியான அரசாங்கம் இல்லாத நிலை ஏற்பட்டது. இது பொருளாதார நெருக்கடியோடு சேர்த்து, இலங்கைக்கு அரசியல் நெருக்கடியாகவும் மாறியது. எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பேசிவந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வியாழனன்று மாலை 6.30 மணியளவில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
தேசிய இடைக்கால அரசாங்கமாக புதிய அமைச்சரவை செயல்பட உள்ளது என்றும் 15 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரம சிங்கவை, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே சந்தித்துப் பேசியதன் பின்னணியில், ரணில் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருந்தனர். தாராளமய சந்தைப் பொருளாதாரத்தை அமல்படுத்தியதன் விளைவாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்என்று வலியுறுத்தி, ஜனாதிபதி மாளிகை முன்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த திங்களன்று இப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிரதமர் ராஜபக்சே மேற்கொண்ட முயற்சி அவருக்கு எதிரான பெரும் வன்முறையாக மாறியது. அது இறுதியில் பிரதமர் மகிந்த ராஜ பக்சே-வின் பதவி விலகலில் சென்று முடிந்தது. இதனால், இலங்கையில் அரசாங்கம் இல்லாத நிலை ஏற்பட்ட பின்னணியில், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஜனாதி பதி கோத்தபய ராஜபக்சே, ஒருவார காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிப்பதாக அறிவித்தார். தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில், “தற்போதைய நிலைமை யைக் கட்டுப்படுத்தவும், நாடு வன்முறைக்குள் தள்ளப்படுவதைத் தடுக்கவும் புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதியின் ‘நிறைவேற்றும் அதி காரத்தை’ ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள், எதிர்க் கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்த நிலை யில், “இலங்கையில் சகஜ நிலை திரும்பியவுடன் ஜனாதிபதிக்கு உள்ள ‘நிறைவேற்றும் அதிகாரத்தை’ ஒழிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கோத்தபய ராஜபக்சே உறுதியளித்தார். இலங்கையில், 2015-ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னணியில், அவர் தானாகவே முன்வந்து, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் 19-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி னார். ஆனால், கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதி யான பின்னர், 20-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார். மக்களின் தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு, 19-ஆவது சட்டத் திருத்தத்தின்படியான ஜனாதிபதியின் ‘நிறைவேற்றும் அதிகாரத்தை’ ஒழிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கோத்தபய குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையேதான் அவர், புதனன்று மாலை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால், ரணில் விக்கிரமசிங்க-வை பிரதமராக நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசியதாக நம்பந்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகின. விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் என்றாலும், தற்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர் ஆவார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால், அது ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) கட்சிதான். ஆனால், அதன் தலைவரான சஜித் பிரேமதாச, “உணவுப் பொருட்கள், எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும் நிலை யில், ஜனாதிபதி கோத்தபய அளிக்கும் எந்தப் பதவியை யும் ஏற்கப் போவதில்லை” என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரணில் பிரதமராக பதவியேற்பார் என்ற தகவல்கள் வெளியான பின்னணியில், சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தபயவுக்கு வியாழ னன்று கடிதம் அனுப்பினார். அதில், பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்ப தாக தெரிவித்தார். எனினும் அதை கோத்தபய ஏற்றுக் கொள்ளவில்லை.
ரணிலுக்கு எதிர்ப்பு
இதனிடையே ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ரணில் எப்போதுமே ராஜ பக்சே குடும்பத்தின் பாதுகாவலராகவே இருந்து வரு கிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனு ரகுமார திசநாயக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலை பிரதமராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை ஜனாதிபதி கோத்தபய ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கையின் முக்கிய புத்தமத பிரமுகர்களில் ஒருவரான ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.