கொழும்பு, மே 7- நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் பொருளாதார நிலைக்குக் காரணமான தற்போதைய ஆட்சியாளர்களும், அவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளும் வெளியேற வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளி வர்க்கம் குரல் எழுப்பியுள்ளது. மே 6 அன்று நடந்த நாடு தழுவிய முழு அடைப்பின்போது, தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து ஆகியவை முழுமையாக அடைக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டில் விடுதலை கிடைத்ததில் இருந்து இதுவரையில் சந்திக்காத ஒரு நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. ஒரு நாளைக்குப் பல மணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. உணவுப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. எரிபொருளைக் கண்ணால் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் மக்கள். இதையெல்லாம் தாண்டி, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைப்பதில்லை. தொடர்ந்து மருந்து தேவைப்படுபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த அவலத்தால் இலங்கை மக்கள் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து பெருந்திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 28 அன்று தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் எச்சரிக்கை மணியாக அமைந்தது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகாவிட்டால் மே 6 அன்று முழு வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர். அறிவித்தபடி, வேலை நிறுத்தம் நடந்தது. வேலை நிறுத்தம், முழு அடைப்பாகவே மாறிவிட்டது. ஒட்டுமொத்த இலங்கையே நின்று போனது. அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் காலியாக இருந்தன. அனைத்து பேருந்து மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளின் வாயில்களில் கறுப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
நெருக்கடிக்குத் தற்காலிகத் தீர்வாக ஊதியத்தை உயர்த்தி வழங்குவது, பணியிடங்களில் நிலவும் சூழ்நிலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைக்கிறார்கள். அதேவேளையில், பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிப்புக்குக் காரணமானவர்களைக் களைய வேண்டும் என்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை இந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களாக நியமித்து கொள்ளைக்கு வழி வகுத்துவிட்டார்கள். அதுவே பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்ததற்குக் காரணம் என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஜேவிபியின் முன்னெடுப்பு இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா(ஜேவிபி) மக்களை, குறிப்பாகத் தொழிலாளர்களைத், திரட்டுவதில் முன்னிற்கிறது. மற்ற அமைப்புகள் தற்போதைய ஆட்சியாளர்களை வெளியேற்றினால் மட்டும் போதும் என்று பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் என்று ஜேவிபி சுட்டிக்காட்டுகிறது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயம் சீர்குலைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பொருட்களின் விலையுயர்வு எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உள்ளே இல்லை” என்று சொல்கிறது.
வருங்காலமற்ற நாடா?
தற்போதைய அரசு இளம் தலைமுறையினரை ஏமாற்றுக்கு உள்ளாக்கி விட்டது என்று குற்றம் சாட்டும் ஜேவிபி, “அந்நிய செலாவணி இல்லாததால் ஒரு எண்ணெய் வாகனத்திற்குரிய கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் நாடு தவிக்கிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகள், அரசின் வீண் செலவு, மோசடிகள், கொள்ளை ஆகியவையே நெருக்கடிக்கான காரணங்களாகும். இளம் தலைமுறையினரைப் பொறுத்தவரை, வருங்காலம் இல்லாத நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வுதான் ஏற்பட்டிருக்கிறது. கொள்கை மாற்றம் தேவை. அதே வேளையில் மக்களை இவ்வளவு பெரிய நெருக்கடிக்குள் தள்ளியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புதிய ஜனநாயக அரசு அமைப்பதே உடனடித் தேவை” என்கிறது.
கொள்கைக்கான போராட்டம்
நெருக்கடிக்கு எதிராகப் போராடும் அமைப்புகள், ஈஸ்டல் நிகழ்வின்போது பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 269 பேருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றன. மேலும், தற்போதைய நெருக்கடிக்கு சீனாதான் காரணம் என்பது போன்று சித்தரிப்பு உள்ளது. நெருக்கடி நேரத்தில் சீனா பெரும் உதவிகளைச் செய்து வருகிறது என்பதோடு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களில் சீனாவிடம் இருந்து பெற்றது வெறும் 10 விழுக்காடுதான் என்றும் ஜேவிபி தெளிவுபடுத்துகிறது. மாற்றங்களைக் கொண்டு வர தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்குதான் பெரும் வாய்ப்பு இருந்தது. விடுதலை பெற்றதில் இருந்து இதுவரையில் இவ்வளவு பெரிய ஆதரவை வேறு எந்தக் கட்சிக்கும் இலங்கை மக்கள் அளித்ததில்லை. நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 60 விழுக்காடு வாக்காளர்கள், மொத்தமுள்ள 1 கோடியே 15 லட்சம் வாக்காளர்களில் 69 லட்சம் பேர், ராஜபக்சேக்களுக்கு ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரநிலை
மக்களின் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஆட்சியாளர்கள் பிடிவாதமாக ஆட்சியில் தொடர்கிறார்கள். என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லாமல் அனைத்துக் கட்சி அரசு என்பதை பல கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. தொழிற்சங்கங்களின் ஒற்றுமை ராஜபக்சேக்களை மிரட்டிவிட்டது. இதனால் அவசரநிலையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு தூதுவர்களும் கூட அவசர நிலையை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கனடா மற்றும் அமெரிக்கத் தூதுவர்கள், கவலை தெரிவித்துள்ளனர். இலங்கையின் பார் கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை, அவசர நிலை தேவையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளன.