world

img

சீன உதவியால் கொழிக்கும் இந்தோனேசியா: நிக்கல் துறையில் பெரும் முன்னேற்றம்

ஜாகர்தா, நவ.23- இந்தோனேசியாவில் நிக்கல் துறையில் சீன உதவியுடன் உருவாக்கப்பட்ட தொழிற்பூங்காவால் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

2013 ஆம் ஆண்டில் சீனாவின் சிங்சான் இரும்பு நிறுவனமும், இந்தோனேசியாவின் பின்டாங் டெலாபன் நிறுவனமும் இணைந்து ஒரு தொழிற்பூங்காவை உருவாக்கினார்கள். சுமார் 3 ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தத் தொழிற்பூங்கா முழுவதும் நிக்கலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களாகவே இருந்தன. அதற்குத் துணையாக இருக்கக்கூடிய நிறுவனங்களும் அங்கு அமைக்கப்பட்டன. இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியில் உள்ள சுலாவெசி மாகாணத்தில் மோரோவளி என்ற இடத்தில் இந்தத் தொழிற்பூங்கா உள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் மேலும் பல சீன நிறுவனங்கள் இந்தத் தொழிற்பூங்காவில் இருந்து செயல்படத் துவங்கின. இந்தோனேசியா மோரோவளி தொழிற்பூங்கா என்று பெயரிடப்பட்ட இந்தப் பூங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் பலன்களை அளித்து வருகிறது. இந்தத் தொழிற்பூங்காவின் வெற்றியால் வடக்குப் பகுதியில் உள்ள மாலுகு மாகாணத்தின் ஹல்மகேரா தீவில் மற்றொரு தொழிற்பூங்கா அமைந்தது. இங்கும் சீனாவின் சிங்சான் நிறுவனமே முதலீடு செய்தது.

வடக்கு ஹல்மகேரா மற்றும் மத்திய சுலாவெசி ஆகிய இரண்டு பகுதிகளுமே இந்தோனேசியாவில் நிக்கல் வளம் அதிகமாக இருப்பவையாகும். இந்தத் துறையில் முன்னேற்றம் காணாமல் இருந்ததற்கு கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம் மற்றும் திறமையான ஊழியர்கள் ஆகியவை  இல்லாததே காரணமாகும். சீன முதலீடு வந்ததால் அந்தத் தடை உடைந்தது. தற்போது துருப்பிடிக்காத இரும்புத் தயாரிப்பில் உலகிலேயே முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா உருவெடுத்துள்ளது. 

துருப்பிடிக்காத இரும்பும் தயாரிப்பில் மட்டுமல்ல, லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதிலும் நிக்கல் முக்கியமான பங்கை வகிக்கிறது. அண்மையில் மின்சாரத்தில் ஓடும் வண்டிகள் தயாரிப்பு அதிகமாகியுள்ளதால் அதிகக் கிராக்கியுள்ள உலோகமாக நிக்கல் மாறியுள்ளது. நிக்கலுக்காக சர்வதேசத் சந்தையில் முதலீட்டாளர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழிற்பூங்காக்களுக்கு அண்மையில் வந்த இந்தோனேசியாவின் அமைச்சர் பின்சர் பன்ட்ஜைதான், புதிய எரிபொருள் பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தோனேசியாவுக்குக் கொண்டு வந்ததற்காக சீன நிறுவனங்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

அனைவருக்கும் வெற்றி
மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திலேயே இத்தகைய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களோடு தொழிற்பூங்கா அமைப்பது இதில் தொடர்புள்ள அனைவருக்குமே வெற்றியைத் தரக்கூடியதாகும் என்று இந்தோனேசியத் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான பாம்பங் சூர்யோனோ தெரிவித்துள்ளார். 
இந்தத் தொழிற்பூங்காவை அமைக்கும்போதே சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பழமையான பவளப் பாறைகள் மற்றும் மீன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். கழிவுகளை வெளியேற்றுவதற்காக மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.  இந்த இரண்டு தொழிற்பூங்காக்களிலும் குப்பைகள் அகற்றவும், பவளப்பாறைகளை உருவாக்கவும் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கவும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். 

லட்சக்கணக்கான கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய ஒளி மற்றும் காற்று மின்சார ஆலைகளை அமைக்கவிருக்கிறார்கள். பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதோடு, உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சீன முதலீடுகள் அமைந்துள்ளன.