world

img

சமூக நலன் மீது கை வைக்காதே!

பாரிஸ், ஜூன் 1- கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்கிறோம் என்ற பெயரில் அரசின் நலத்திட்டங்களை சுருக்க முயற்சிக்க வேண்டாம் என்று பிரான்ஸ் அரசுக்கு அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் வெற்றி பெற்றார். வலதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்த அவர் மீண்டும் வெற்றி பெற்றதற்கு, போட்டி அவருக்கும், அதி தீவிர வலதுசாரி வேட்பாளருக்குமாக மாறியதே காரணமாகும். அவருடைய அதிகாரத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிராக பிரான்ஸ் தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி பல்வேறு நலத்திட்டங்களை சுருக்கி வந்ததை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியே வந்தன.

நலத்திட்டங்களுக்கான நிதியை இல்லாமல் செய்வது என்ற நவீன தாராளமயக் கொள்கையின் இலக்கை நிறைவேற்ற பெருந்தொற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு எதிராக வலுவான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. மே 30 ஆம் தேதியன்று நாடு தழுவிய பேரணிகளுக்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலத்திட்டங்கள் மீது கை வைக்காதே உள்ளிட்ட பல முழக்கங்களை எழுப்பியவாறு பங்கேற்றனர். கொரோனா தாக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் போராட்டங்கள் நடத்துவதில், எதிர்ப்பைத் தெரிவிப்பதில் சிரமங்கள் இருந்தன. நடத்தப்பட்ட போராட்டங்களிலும் பங்கேற்பு குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் தொழிலாளர்கள் திரளத் தொடங்கியுள்ளனர். தாக்குதல் மே 1 அன்று நடந்த மே தினப் பேரணியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கும் இந்தப் பேரணிகளில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஓய்வூதியம் தொடர்பான சீர்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மே தினப் பேரணிகள் நடந்தன. பல இடங்களில் காவல்துறையினர் பேரணியைக் குலைக்க முனைந்தனர். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொழிலாளர் ஒற்றுமையைக் குலைக்கவே நடத்தப்பட்டன என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.