world

பைடன் : கடன் நெருக்கடியால் பயணங்கள் ரத்து

வாஷிங்டன், மே 17- அமெரிக்கா மீதான கடன் நெருக்கடிக்கு தீர்வு காணாத நிலையில், தனது சில பயணங்களை அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் ரத்து செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா வாங்கியுள்ள கடன், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும் சூழலில் உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்தே இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று பைடன் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், இதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் வாங்க வேண்டும். அங்கு எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. அவர்களோடு நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அங்கிருந்து பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதாக இருந்தார். ஆனால் கடன் நெருக்கடிக்கு இதுவரையில் தீர்வு கிடைக்காததால் அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த “குவாட்” கூட்டணியின் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஒருவேளை, இருதரப்புக்கும் இடையில் கடன் வாங்குவதற்கான அளவை உயர்த்துவதற்கான உடன்பாடு ஏற்படாவிட்டால், பெரும் அழிவை நோக்கி உலகத்தை அழைத்துச் செல்வதாக அமையும் என்று அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜேனட் யெல்லென் எச்சரித்துள்ளார். 1960 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 78 முறை கடன் அளவை உயர்த்தியோ, நீட்டித்தோ அல்லது மாற்றியோ அமைத்திருக்கிறார்கள்.