பொகோடா, மே 30- தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் சுற்றில் இடதுசாரி வேட்பாளரான குஸ்தவோ பெட்ரோ முதலிடம் பெற்றிருக்கிறார். மே 29 அன்று நடந்த வாக்குப்பதிவில் 51 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகின. ஏராளமான அரசியல் வன்முறைகள் நிகழ்ந்ததே வாக்குப்பதிவு குறைவாக இருந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வாக்குப்பதிவின்போது முறைகேடுகளோ அல்லது மோதல்களோ இல்லாமல் இருந்தாலும், முற்போக்கு மற்றும் இடதுசாரிக் கருத்துகளை வெளியிட்டு வந்தவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இடதுசாரிகளின் குரல்களை தடுப்பதில் தற்காலிக வெற்றி கிடைத்தாலும், இந்த முறை அது பலிக்கவில்லை. 99.96 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 40.2 விழுக்காடு வாக்குகளோடு இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
50 விழுக்காடு வாக்குகளை யாராவது ஒருவர் பெற்றால், இரண்டாவது சுற்று நடைபெறாமல் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஆனால், இங்கு முதலிடத்தைப் பிடித்த பெட்ரோ 40 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதால் இரண்டாவது சுற்றுக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்த சுற்றில் 28 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற ரொடோல்போ ஹெர்னாண்டஸ் அவரை எதிர்கொள்வார். முதல் சுற்றில் முன்னணி பெற்ற பெட்ரோ இரண்டாவது சுற்றில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால், கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதி என்ற பெயரை பெட்ரோ பெறுவார். மாற்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று தேர்தலுக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பெட்ரோ, கொலம்பிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று தனது ஆதரவாளர்களை வலியுறுத்தவும் செய்தார். பொய்யான கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலுமே வலதுசாரி வேட்பாளரான பெடரிகோ குட்டிரஸ்தான் இரண்டாவது இடத்தைப் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற முழக்கத்தை முன்வைத்து வந்த ரொடோல்போ ஹெர்னாண்டஸ் இரண்டாவது சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ளார். கொலம்பியாவின் வலதுசாரிகளுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.