world

img

பாலஸ்தீன அரசியல் திருப்புமுனை : தலைவர்கள் சந்திப்பு

அல்ஜீர்ஸ், ஜூலை 7- அல்ஜீரிய நாட்டின் ஜனாதிபதி அப்தெல்மஜீத்தின் முன்முயற்சியால் பாலஸ்தீன அரசியலில் பிரிந்து நிற்கும் இரண்டு முக்கியமான அமைப்புகளின் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அல்ஜீரியாவில் நடந்த இந்தச் சந்திப்பில் மேற்குக் கரைப்பகுதியைச் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன நிர்வாகத்தின் தலைவர்  முகமது அப்பாஸ் மற்றும் காசாத் திட்டுப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அல்ஜீரிய அரசு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இரண்டு தலைவர்களின் கைகளையும் கோர்த்தவாறு அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மஜீத் அமர்ந்திருக்கிறார். அல்ஜீரிய நாட்டின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள இரண்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரை யும் சந்திக்க வைக்க இந்த வாய்ப்பை அப்தெல்மஜீத் பயன்படுத்திக் கொண்டார் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக அல்ஜீரிய ஜனாதிபதிக்கு நன்றி சொல்லியாக வேண்டும் என்று காசாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளரான ஹூசம் அல் தஜ்ஜானி கூறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனம் இரண்டாகப்  பிரிக்கப்பட்டது. காசாப் பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் அமைப்பின் வசம் வந்தது. தேர்தல் முடிவுகளை முகமது அப்பாஸ் தலைமையிலான படா  அமைப்பு அங்கீகரிக்க மறுத்ததால் இத்தகைய மோதல் உருவானது. அப்போதிருந்து மேற்குக்கரைப் பகுதியை படாவும், காசாத் திட்டுப்பகுதியை ஹமாசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிளவுக்கு முற்றுப்புள்ளி  வைக்க சில அரபு நாடுகள் முயற்சி செய்தன. அந்த முயற்சிகளுக்கு வெற்றி  கிட்டவில்லை. எகிப்து, கத்தார் மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் முயற்சிகளால் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. அந்த உடன்பாடுகள் நடை முறைக்கு வரவேயில்லை. அந்த நாடுகள் மேற்கொண்டதைப் போன்று அல்ஜீரியாவும் தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.