காசா, மே 10- 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் 50 அப்பாவி பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உலக அளவில் இதற்கு கண்டனம் எழுந்தாலும் தனது ஆக்கிரமிப்புகளையும், அந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் மீதான தாக்குதல்களையும் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தவில்லை. அமெரிக்காவின் முழு ஆதரவோடு நடக்கும் இந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. பயங்கரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் ஏராளமான அப்பாவி மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நியாயமான விசாரணை கோரி சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பாலஸ்தீன சுகாதாரத்துறை புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி 2022ல் தொடங்கி தற்போது வரையில் நடந்த தாக்குதல்களில் 50 பாலஸ்தீன அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த 50 பேரில், 49 பேர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப்பகுதிகளையும், ஒருவர் காசாத்திட்டுப் பகுதியையும் சேர்ந்தவராவார். இந்தப் பட்டியலில் இரண்டு பெண்களும் அடங்குவர். அவர்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களில் 80 வயது முதியவரான ஓமர் அஸ்ஸாத்தும் அடங்குவார். பதின்பருவத்தைச் சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலை
செய்யப்பட்டவர்களில் 25 பேர் தங்களின் இருபதுகளில் உள்ளவர்களாவர். ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள மேற்குக் கரைப்பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள் மீதான ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த சில வாரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல் குட்ஸ் நகரில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் பலமுறை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு. மேற்குக் கரைப்பகுதியின் நேப்ளஸ் நகருக்கு அருகில் உள்ள பெய்ட் டாஜன் என்ற கிராமத்தில் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இத்தனைக்கும் அந்த இரண்டு வீடுகளும் புதிதாகக் கட்டப்பட்டு வந்தவையாகும். அந்த கிராமத்தில் புதிதாக இஸ்ரேலியர்கள் குடியிருப்புகளை அமைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு ஆக்கிரமிப்புகள் மூலமாக சுமார் 7 லட்சம் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.