லண்டன், ஜூலை 7- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியிருப்பதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில்தான் அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால், ஆளும்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் அவரைப் பாதுகாத்த னர். ஆனால், மீண்டும் அவர் மீது அத்தகைய தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது கட்சியில் பெரும்பாலானவர்கள் அவர் பக்கம் நின்றனர். ஆனால் இம்முறை, முக்கியமான தலைவர்கள் அவருக்கு எதிராக நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். போரிஸ் ஜான்சனுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வந்தபோதிலும், இரண்டு முக்கியமான அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி யுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
நிதியமைச்சர் ரிஷி சுனாக், சஜித் ஜாவேத் ஆகிய இருவரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியதோடு, நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொறுப்பிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்றும் கோரியுள்ள னர். இது போரிஸ் ஜான்சன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. படுமோசமான நடத்தையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் பின்சரை துணைக் கொறடாவாக நியமித்ததுதான் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போலானது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வெளியானதால், பதவி விலக வேண்டி வந்தது. இருந்தாலும் அவரைப் பற்றித் தெரிந்தே நிய மனம் செய்தார் என்று கூறி, போரிஸ் ஜான்சனை யும் பதவி விலகச் சொல்லி வருகிறார்கள். தன் மீதான அழுத்தங்களைத் தாண்டி, பதவியில் நீடிப்பேன் என்று ஜான்சன் சொல்லி வருகிறார். ஆனால், ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், ஒரு ஆண்டுக்கு மீண்டும் கொண்டு வர முடியாது என்ற விதியை ஜான்சனுக்கு சாதகமாகச் சுட்டிக்காட்டு கிறார்கள். இருப்பினும், ஆளுங்கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் ஜான்சன் பதவி விலகா விட்டால், அந்த விதியை மாற்றிவிடுவோம் என்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் இப்படித் தான் விதியைத் தளர்த்தி தெரசா மேக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.