world

img

ராணுவ வாகனங்களைத் தடுத்து நிறுத்திய கம்யூனிஸ்டுகள்

ஏதென்ஸ், ஜூன் 2- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பிற நாடுகளில் தலையிட்டு சண்டையை மூட்டுவது, ஆயுதங்களைப் போராடும் நாடுகள் மீது திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கிரீசை இழுத்துவிட வேண்டாம் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மக்களின் இந்தக் கருத்தை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துப் போராடி வருகிறது. மாணவர் சமூகம் இந்தக் கருத்துக்கு ஆதரவாக உள்ளது. அண்மையில் நடந்த பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் கம்யூனிஸ்டுகள் மாணவர்கள் அமைப்பு முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. நேட்டோவின் உறுப்பு நாடுகள் என்ற முறையில், ஸ்பெயின், துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய மூன்று நாடுகளும் பெரும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன என்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. முகாம்கள், ஆயுதக்கிடங்குகள், பொருள் விநியோகப் பாதைகள் என்று இந்த நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எதிர்வினைகளைச் சந்திக்கும் அபாயத்தில் சிக்குகின்றன. அதனால் அமெரிக்க-நேட்டோ முகாம்களை விலக்கும் கோரிக்கையை இந்த மூன்று நாட்டு மக்களும் இணைந்தே எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கிரீசைப் பொறுத்தவரை, அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியை எதிர்க்கும் போராட்டத்தில் அந்நாட்டின் ஆளுங்கட்சி மட்டுமல்ல, சமூக ஜனநாயகக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பசோக் மற்றும் சிரிசா ஆகிய கட்சிகளும் மக்களைக் கைவிட்டு விட்டன. இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளுமே ராணுவக் கூட்டணியை ஆதரித்தே வந்துள்ளன. என்று கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

நிறுத்திய கம்யூனிஸ்டுகள்

நேட்டோ பயிற்சி ஒன்று பிரிட்டனுக்கு அருகில் நடத்தியுள்ளனர். இதில் பங்கேற்றுவிட்டு, தங்கள் நாடுகளுக்கு கிரீஸ் வழியாக 17 ராணுவ வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. கிரீசின் துறைமுகமான இகோமெனிஸ்டாவை இந்தப் பணிக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். துறைமுகத்தின் வாயிலில் அந்த வாகனங்களை மறித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏகாதிபத்தியம் நடத்தும் போருக்கான தளமாக இகோமெனிஸ்டா துறைமுகத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.