புதுதில்லி:
55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசத்திற்கு இடையேயான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் டிசம்பர் 17 வியாழக்கிழமையன்று தொடங்கிவைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் வியாழக்கிழமையன்று காணொலிக்காட்சி மூலம் உரையாடினர். இதில் இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியா-வங்கதேசத்திற்கு இடையேயான ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர். வங்கதேசத்தின் முதல்ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவுதபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் .வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், வங்கதேசம் ஒரு சுதந்திர தேசமாக 50 ஆண்டுகளைக் கொண்டாடும் முனைப்பில் உள்ளது. 2021 மார்ச் 26 அன்று உங்கள் (பிரதமர் மோடி) டாக்கா வருகை வங்கதேசத்தின் விடுதலைப் போரின் 1971 ஆம் ஆண்டின் கூட்டு நினைவேந்தலின் மகுடமாக இருக்கும் என்று தெரிவித்தார்.