இங்கிலாந்து மற்றும் அதன் ஆளுகைக்குட்பட்ட வேல்ஸ் ஆகியவற்றில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 3,000 குற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அதனை தேசிய அவசர நிலையாக காவல்துறை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை பொது பாதுகாப்புக்கு தேசிய அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்த நிலையில் தற்போது அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 12 பெண்களில் ஒருவராவது கடுமையான வன்முறைக்கு உள்ளாவதாக மதிப்பிடப்படுகிறது. துல்லியமாக கணக்கீடு செய்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகஇருக்கும்.
2022-2023 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக 10 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்களை காவல்துறை பதிவு செய்துள்ளது. 2018-2019 மற்றும் 2022-2023 ஆண்டுகளுக்கு இடையே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வன்முறைகளை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 37 சதவீதம் அதிகரித்துள்ளது. குடும்பத்தினரால் நடத்தப்படும் வன்முறையே மிக அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொற்றுநோய் போல பரவியுள்ளது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் சுரண்டல் குற்றங்கள் 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு 435 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது 20,000 என்றிருந்த குற்றங்களின் அளவு கிட்டத்தட்ட 1 லட்சத்து 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அங்குள்ள பெரிய வயதினரில் 20 பேரில் ஒருவர் அல்லது 23 லட்சம் பெரியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என தெரிய வந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடைப்படையில் தான் இந்த புள்ளி விவரங்கள் கூறப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத குற்றங்களையும் சேர்க்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.