லைபீரியா தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.
லைபீரியா நாட்டின் மன்ரோவியாவில் உள்ள தேவாலயத்தில் புதன்கிழமை இரவு பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல், கூட்டத்துக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, அங்கிருந்த மக்கள் உயிருக்கு பயந்து தப்பிக்க ஓடினார்கள். அப்போது பலர் கீழே விழுந்த நிலையில் அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறினர். இந்த கூட்ட நெரிசலில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கும் லைபீரிய அதிபர் ஜார்ஜ் வியா, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.