world

img

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ரகசிய பள்ளிகள்

காபூல்,அக்.5- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஏற்கெனவே இருந்த பெண்ணுரிமையையும் பறித்து விட்டனர்.பெண்கள் கல்வி கற்கச் செல்வது தனியாக வெளியில் செல்வது, பூங்காக்களுக்கு செல்வது,அரசியலில் ஈடுபடுவது, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவது என அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்து பெண்களை பொது வாழ்வில் இருந்து வெளியேற்றி விட்டனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை கள், ஐநா சபை உட்பட அனைத்தும் ஆப்கன் நாட்டை சேர்ந்த பெண்களை பணியில் இருந்து விடுவித்தன. பெண்களுக்கான அழகு நிலையங்கள் மூடப்பட்டதால் மட்டும் அந்நாட்டில் 60,000 பெண்கள் வேலையிழந்துள்ளனர்.  கடந்த மாதம் கூட உதவித் தொகையுடன்  உயர் கல்விக்காக அரபு நாட்டிற்கு செல்ல இருந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக தலிபான் அரசு தடுத்து நிறுத்தியது. ஆப்கானிஸ்தானின் பெண் அரசியல் தலைவர்களும் பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஷரியா சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களின்படி ஆப்கானிஸ்தானை  உருவாக்குவோம் என்றும், பெண்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம், பல்கலைக்கழகங்கள் செல்லலாம்  என்றும், வேலைக்குச் செல்லலாம் என்றும் அவர்கள் கொடுத்த அனைத்து உறுதி மொழிகளையும் உடைத்து விட்டார்கள். இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசுக்கு தெரியாமல் பெண்களுக்காக ரகசிய பள்ளிக் கூடங்களை நடத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 150 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஆப்கானிஸ்தானின் 8 மாகாணங்களில் பெண்களுக்கான ரகசியப் பள்ளிகளை ஒரு வலைப்பின்னல் அமைப்பில் ஹக்கீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 25 வயது இளைஞர் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான கிறிஸ்டியன் அமன்பூரின்  “பேட்டில் ஃபார் ஆப்கானிஸ்தான்” என்ற   ஆவணப்படம் மூலம் ஈர்க்கப்பட்டு,பெண்களுக்காக ரகசியப் பள்ளிகளை உருவாக்க முடிவு செய்ததாகவும் தற்போது பல பெண்கள் இதனால் கல்வி கற்க முடிகிறது என்கிறார்கள். தலிபான் அரசின் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை பெண்கள் மீதான பாகுபாடு மற்றும் பெண் வெறுப்பு” என ஐ.நா சபை கடுமையாக விமர்சித்துள்ளது.