ஐ.நா.சபை: குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் எனவும், நிலையான வளர்ச்சிக்கான இலக்கு ஆண்டை நெருங்கி வரும் சூழலில் பெண் குழந்தைகள் வளர்ச்சியில் உலகம் தோல்வியடைந்து வருவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்களுக்கு எதிரான நிலை மாறாவிட்டால் 11 கோடி பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கூடங்களில் இருக்கமாட்டார்கள் எனவும் 34 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் கடுமையான வறுமையில் தள்ளப்பட்டிருப்பார்கள் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் நடப்பாண்டு கருப்பொருளாக - ‘பெண்கள் தங்கள் லட்சியங்களை அடையவும் பாலின சமத்துவத்தை அதிகரிக்கவும் உலகம் ஆதரவளிக்க வேண்டும்’ என்ற கருதுகோள் முன் வைக்கப்பட்டது. பழமைவாதத்தால் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் உட்பட சில இடங்களில் பெண்கள் தங்கள் கல்வி மற்றும் பொருளாதார அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களை இழந்துள்ளனர். புதிய வடிவத்திலான சமத்துவமின்மை உருவாகி வருகின்றது. பல பெண்கள் இணைய பயன்பாட்டில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பெண்களும் சிறுமிகளும் வழி நடத்தும்போது அதன் அணுகுமுறைகளில் மாற்றத்தை உருவாக்கலாம், முன்னேறலாம். தேவைகளை பூர்த்தி செய்யும் கொள்கைகள் மற்றும் தீர்வுகளை அவர்கள் உருவாக்குவார்கள். ஆனால் தலைமைப் பதவிகளில் பாலின இடைவெளி வேரூன்றி காணப்படுகிறது. தற்போதைய தரவுகள்படி, பெண்கள், ஆண்களைவிட சராசரியாக ஒரு நாளைக்கு 2.3 மணி நேரம் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.