பாரீஸ், ஜன.19- மக்களை ஒடுக்குவதற்காக மியான்மரி லேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி வருகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்ட கால மாக இருந்த ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி, மக்களாட்சியைக் கொண்டு வரக் காரணமாக இருந்த ஆங் சான் சூகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டு, அவ ரது அரசியல் நடவடிக்கைகள் முடக்கப் பட்டுள்ளன. பிப்ரவரி 2021-இல் மீண்டும் ராணுவத்தின் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதை அடக்குவதற்காக ராணுவம் அனைத்து வகையான நடவடிக்கை களிலும் இறங்கியுள்ளது. அதிலும் தனக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு வளர்த்துக் கொண்டது. அரசின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கபாசாவில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கண்ணிவெடி குண்டுகள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறார்கள். மக்க ளின் போராட்டங்களைத் தடுக்க இவற்றையே பயன்படுத்துகின்றனர்.
மியான்மரின் இந்த ஆயுத உற்பத்திக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தரும் உதவிதான் காரணம் என்று மியான்மருக்கான சிறப்பு ஆலோசனைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. உரிமங்கள், மூலப் பொருட்கள், மென்பொருள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனங்கள் தந்து உதவியுள்ளன. இதுகுறித்துத் தங்களது அறிக்கையில் விரிவாக இந்தக் குழு விபரங் களைத் தந்திருக்கிறது. இக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை அதிகாரிகளில் ஒருவருமான யாங்கி லீ, ‘‘உலகின் படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கு சொந்தக்காரர்களில் ஒருவரான மியான்மர் ராணுவத்திற்கு அந்நிய நிறுவனங் கள் உதவி செய்து வருகின்றன. மியான்மர் மக்கள் மீது அன்றாடம் மேற்கொள்ளப்படும் கொடுமைகளுக்கு உதவும் ஆயுதங்களைத் தயாரிக்க இந்த உதவி தரப்படுகிறது. உதவியைத் தரும் இந்த நிறுவனங்களுக்கும், அந்த நிறுவனங்கள் உள்ள நாடுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் அதைத் தட்டிக் கழிக்க முடியாது’’ என்கிறார்.
துயரத்தை வைத்து லாபம்
பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்துடன் தொடர்புடைய பலரின் பேட்டிகள் மற்றும் மியான்மர் பாதுகாப்புத்துறை யில் இருந்து கசிந்த ஆவணத் தகவல்கள் ஆகி யவற்றைக் கொண்டே இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். மியான்மர் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளில் அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட துல்லியமான இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துல்லிய இயந்திரங்களை இயக்கு வதற்கு சிறப்பு மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருளை பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடு களிலிருந்து பெற்றிருக்கிறார்கள். ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர், ‘‘மியான்மர் மக்க ளின் துயரத்தில் இந்த நாடுகள் லாபத்தை சம்பாதித்து வருகின்றன. இந்த இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களைத் தந்த நிறு வனங்கள் அமைந்துள்ள நாடுகள், விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் நிர்வாக அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்குவது அவசியம்’’ என்று பரிந்துரையும் செய்திருக்கிறது.