வாஷிங்டன், ஜன.3 - 2022 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி வன்முறைக் கலாச்சாரத்தால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன அல்லது காயம் அடைந்தன. துப்பாக்கி வன்முறை காப்பகம் என்ற அமைப்பு இது குறித்த புள்ளிவிபரங்களைத் தொகுத்துள்ளது. 17 வயதுக்குக் கீழான 6 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டனர் அல்லது துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தனர் என்று தங்கள் புள்ளிவிபரத்தில் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்த அமைப்பினர் புள்ளிவிபரங்களை சேகரிக்கத் தொடங்கினர். அப்போதிருந்து 2022இல் தான் அதிகமான அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி, 11 வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 306 குழந்தைகள் கொல்லப்பட்டன. 688 குழந்தைகளுக்குக் காயங்கள் ஏற்பட்டன. 12 வயது முதல் 17 வயது வரையுள்ளவர்களில் துப்பாக்கிச் சூட்டிற்கு 1,325 குழந்தைகள் பலியாகின. 3 ஆயிரத்து 732 குழந்தைகளுக்குக் காயங்கள் ஏற்பட்டன. அமெரிக்க நாடு முழுவதும் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் பாதிப்புகளை இந்த அமைப்பு தொகுத்ததில் இருந்தே இந்தப் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக இதற்கு முட்டுக்கட்டைகள் உள்ளன. குடியரசுக்கட்சியினர் துப்பாக்கிகளுக்கான உரிமங்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் அக்கட்சியினருக்கு பெரும்பான்மை இருப்பதால், துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் நடவடிக்கைகளுக்கு அங்கு ஒப்புதல் கிடைக்காத நிலை உள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த சம்பவங்கள் குறித்துக் கடுமையான கருத்து தெரிவித்தார். கொலைக்களங்களாக அமெரிக்கா மாறிவிட்டதாக சாடினார். இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளைத் தடை செய்யப் போவதாகவும் அறிவித்தார். அவர் ஒரு ஆணையையும் பிறப்பித்தார். ஆனால், அந்த ஆணை நடைமுறைக்கு வருவதில் சிக்கல்கள் எழுந்தன. துப்பாக்கிகள் அதிகரிப்பு 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, அமெரிக்க மக்கள் கைகளில் 39 கோடியே 30 லட்சம் துப்பாக்கிகள் உள்ளன.
அதாவது 100 மக்களுக்கு 120.5 துப்பாக்கிகள் இருக்கின்றன. நான்காண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் துப்பாக்கிகளின் விற்பனை பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். ஜனவரி 1 ஆம் தேதி அலபாமா மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 17 வயது முதல் 57 வயது வரையுள்ளவர்களாக இருந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில்(2017-2022) ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடுகளில் பலியாகியிருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.