வேலை நிறுத்தம் நடப்பது உறுதி என அமெரிக்க ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டு கொண்டிருக்கும் அமெரிக்க பெரு நிறுவனமான யுபிஎஸ் கப்பல் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வை வழங்கவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் போதாது என்று அந்நிறுவனத்தின் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் தங்கள் கோரிக்கையைக் கேட்க நிறுவனம் தயாராக இல்லாததால், வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தக் கப்பல் நிறுவனத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு வலுவான ஊதிய முன்மொழிவை நிறுவனம் முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள். பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், தற்போதுள்ள விலை உயர்வைத் தாக்குப் பிடிக்கும் வகையில் ஊதிய உயர்வை நிறுவனம் முன்வைக்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகள், நிறுவனம் தெரிவிக்கும் முன்மொழிவுகளை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார்கள்.
தங்கள் வேலைநிறுத்த அறிவிப்பில், "கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் 3 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்களுக்கு வலுவான ஊதிய உயர்வு முன்மொழிவைத் தரும் வகையில் பொறுப்பாக நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும். நல்ல மற்றும் கடைசி முன்மொழிவை நிறுவனம் தொழிலாளர்களின் முன்னால் வைப்பது நல்லது. அமெரிக்க வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் வேலை நிறுத்தம் நடக்கப்போவது உறுதி. அதைத் தடுக்க முடியாது" என்று தொழிற்சங்கத் தலைவரான சீன் ஓ பிரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிறுவனத்தில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆண்டுக்கு கோடிக்கணக்கான டாலர்களை ஊதியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நிறுவனத்தின் வர்த்தகம் நடப்பதற்குக் காரணமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. பணியில் இருக்கும்போது தேவைப்படும் அடிப்படையான தேவைகள் பற்றித் தரப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை" என்றும் குற்றம் சாட்டினார்.
உணவகத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம்
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆரஞ்சு மாகாணத்தில் உள்ள உணவகத் தொழிலாளர்கள் அடுத்த வாரத்தில் வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்கள். இந்தப் போராட்டம் மேலும் பல பகுதிகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்று கூறியுள்ள தொழிற்சங்கம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அறைகூவல் விடுத்தது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தின் முன்பாக நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால், அதில் பங்கேற்றவர்களின் 200 தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளைக் குறிவைத்து இந்தக் கைது நடவடிக்கை இருந்தது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் தங்களை மேலும் உறுதியாக்கி இருக்கிறது என்று தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி உணவகத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.