world

img

போராட்டக்களத்தில் நியூயார்க் டைம்ஸ் ஊழியர்கள்

நியூயார்க், டிச.9- அமெரிக்காவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்.

பத்திரிகையின் உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையிலான ஊதிய உடன்பாடு மார்ச் 2021ல் நிறைவுக்கு வந்துவிட்டது. அடுத்த உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை. 40 சுற்றுகள் பேசிவிட்டார்கள். உரிமையாளர்கள் இழுத்தடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஊதிய உயர்வு மட்டுமில்லாமல், வீட்டிலிருந்து பணிபுரிதல், மருத்துவம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் ஆகியவையும் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்றுள்ளன.

பல மாதங்கள் பேசியும் பலன் இல்லாததால், 24 மணிநேர வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கம் அறிவித்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே உரிமையாளர்கள் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். ஒரு நியாயமான தீர்வுக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம் என்று தொழிற்சங்கம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. எங்கள் மதிப்பு என்னவென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவு பேசியும், இன்னும் பேசத் தயாராக இருந்தாலும், பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்யும் அணுகுமுறையைத்தான் அவர்கள் காட்டுகிறார்கள். அதனால், வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 1,800 ஊழியர்களில் 1,450 பேர் இந்தத் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் செய்தி அறைகளைக் கூட, செய்தியாளர்கள் அல்லாத ஊழியர்களை வைத்து சமாளிக்க முடியுமா என்று நிர்வாகம் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.