மெக்சிகோ சிட்டி, ஜன.2- கொலம்பியாவில் அரசுக்கும், தேசிய விடுதலைப் படைக்கும் இடையிலான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றிருக்கிறது. கொலம்பியாவில் சர்வாதிகாரத்தையும், வலதுசாரி ஆட்சியாளர்களையும் எதிர்த்த இடதுசாரிக் குழுக்கள், ஆயுதந்தாங்கியும் போராடி வந்தன. இந்தக் குழுக்களும், கொலம்பிய அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. மெக்சிகோவில் அம்லோ என்று அழைக்கப்படும் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் பலனாக தற்போது தேசிய விடுதலைப் படைக்கும், கொலம்பிய அரசுக்கும் இடையில் முதல் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. வெனிசுலாவின் தலைநகரான காரகசில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் நிறைவில், மிக முக்கியமான இந்த நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று வெனிசுலாவின் ஜனாதிபதியான நிகோலஸ் மதுரோ தெரிவித்தார். தங்களின் பேச்சுவார்த்தையின் நிறைவில், இரு தரப்பும் ஒரு கூட்டறிக்கையையும் வெளியிட்டனர். தங்கள் பேச்சுவார்த்தை பரஸ்பர மரியாதையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் மற்றும் உளப்பூர்வமாகவும் இருந்தது என்று தெரிவித்திருக்கிறார்கள். கொலம்பியாவில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்திய குஸ்தவோ பெட்ரோ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
இந்தப் பேச்சுவார்த்தை வெனிசுலாவுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு என்று கூறியுள்ள நிகோலஸ் மதுரோ, ‘‘நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தித் தரும் வாய்ப்பைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறோம். பேச்சுவார்த்தையும் சாதகமான கருத்துகளோடு நிறைவு பெற்றிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். இதற்கு முன்பும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், இது போன்ற சூழல் நிலவவில்லை என்று இருதரப்பும் கருத்து தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை புதியதாக இருந்தாலும், ஏற்கனவே பேசப்பட்ட அம்சங்களையும் எடுத்துக் கொண்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தை நவம்பர் 21, 2022 அன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற கொலம்பியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா ஜோஸ் பிசார்ரோ, ‘‘நாடு குறித்த இருதரப்பின் பார்வைகளையும் நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது.
அரசியல் உரையாடல்களைத் தாண்டி இரு தரப்புக்கும் கொலம்பியாவுக்கான பொது நலன், கொலம்பியா மீதான காதல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம்’’ என்றார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடப்பாண்டில் மெக்சிகோவில் நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்கு உறுதியளிக்கும் வகையில் கியூபா, நார்வே மற்றும் சிலி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. உடன் பயணிப்பவர்களாக ஐக்கிய நாடுகள் சபையும், கத்தோலிக்க திருச்சபையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். ஆனால் அவர்களிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.