ஜூன் 6 -10 -ல் அமெரிக்க நாடுகளின் ஒன்பதாவது உச்சி மாநாட்டை லாஸ் ஏஞ்சல்ஸில் ஜோ பைடன் கூட்டியுள்ளார் .இம்மாநாட்டில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என வதந்திகள் பரவின. எட்டாம் தேதி பங்கேற்பார் என்ற தகவலும் உள்ளது. துவங்கும் முன்பே மாநாடு தோல்விகளை சந்தித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை எந்த நாட்டிற்கும் அழைப்பிதழ் செல்லவில்லை. நிகரகுவா, வெனிசுலா, கியூபா ஆகிய மூன்று நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை என அமெரிக்க அரசின் பத்திரிகை தொடர்பாளர் கூறினார். இதனால் கரீபிய நாடுகளும், தென் அமெரிக்க நாடுகளும் கோபமடைந்து அந்த மூன்று நாடுகள் மாநாட்டில் பங்கேற்காவிடில் தாங்களும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. நிக்கோலஸ் மதுரோ அதிபராக உள்ள வெனிசூலாவை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை .கியூபா குறித்து வெள்ளை மாளிகை நிர்வாகி எதுவும் கூறவில்லை. கியூபா பங்கேற்காவிடில், மற்ற பல நாடுகளும் மாநாட்டில் பங்கேற்காது என அறிவித்துள்ளதால், மாநாட்டின் நிர்வாகி கியூபா குறித்து எதுவும் கூறாமல் மழுப்புகிறார்.
டிரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட சில பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்போது நீக்கியுள்ளது. வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் வெனிசுலாவின் அரசியல் நிலையை அமெரிக்கா ஏற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் கூட தங்கள் ஜனாதிபதிகளை அனுப்பாமல், வெளியுறவு அமைச்சர்களை அனுப்ப முடிவு செய்துள்ளன .மாநாட்டின் நோக்கம் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது அல்ல; ‘அமெரிக்க ஜனநாயகத்தை’ புகழ்வதற்காக ஒரு மாநாடு. இதேவேளையில் லாஸ் ஏஞ்சல்சில் ஜூன் 8-10-ல் 100க்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள் மக்களின் ஜனநாயகம் காக்கும் உச்சி மாநாட்டை நடத்துகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மிகுந்த ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய நகரம். அமெரிக்க நாட்டிலேயே வீடற்றோர் அதிகமாக வாழும் நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ். இம்மாநாட்டை, மாநாடு கூறும் செய்திகள் மக்களை சென்றடைவதை ஜோ பைடன் விரும்பவில்லை. மாநாட்டின்போது லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பேரணி நடத்த அனுமதி கேட்டு பிப்ரவரியிலேயே மனு செய்தும், 95 நாட்கள் கடந்த பிறகும் அரசு மனு குறித்து மௌனம் சாதிக்கிறது .இதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம்!