உலக அளவில் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் 10 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அவலம் நிலவுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் வலியிலிருந்து லாபம் என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் அமைப்பு ஆய்வறிக்கையை டாவோஸ் நகரில் நடந்த கூட்டத்தில் வெளியிட்டது. அதில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேகமாக அதிகரித்ததன் விளைவாக உணவு, எரிபொருள் துறை ஒவ்வொரு 2 நாட்களிலும் 1 பில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டியது. கொரோனா பேரிடரை பயன்படுத்தி பெரும் பணக்காரர்கள் கொண்டாடி வரும் வேளையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி வருகின்றனர்.
கொரோனா காலங்களில் மட்டும் உலகளவில் 573 பேர் 100 கோடி டாலருக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர். அதே சமயம் 26 கோடியே 30 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 30 மணிநேரத்திற்கும் ஒரு பெரும் பணக்காரர் உருவாகும் சூழலில் ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் 10 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுகின்றனர்.
உலகளவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 13.9 சதவிகிதம் உள்ளது. இது கடந்த 2000 ஆம் ஆண்டை விட 4.4 சதவிகிதம் அதிகம் ஆகும். குறைவான சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் இன்னும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் சூழல் நிலவுகிறது என ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.