world

img

பொலிவிய அரசைக் கவிழ்க்க சதி - பதிலடி கொடுக்கும் மக்கள்

லா பாஸ், நவ.3- பொலிவியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் தலைமையிலான இடதுசாரி அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தில் வலதுசாரி அமைப்புகள் வன்முறை வெறியாட்டத்தை ஆடி வருகின்றன. பொலிவியாவில் அமெரிக்க ஆதரவுடன் இயங்கி வரும் வலதுசாரி அமைப்புகள், தற்போதுள்ள மக்கள் நல அரசைக் கவிழ்க்கத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்நாட்டின் சில மாகாணங்களில் வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை ஆளுநர்களாக மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் நிலைமையையே குலைக்க வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சாண்டாகுரூஸ் மாகாணத்தில் கமாச்சோ ஆளுநராக உள்ளார். இவர் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர். இவரது ஆதரவாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் சாண்டா குரூசில் உள்ள லா கார்டியா நகரில் வலம் வந்தனர். நாட்டை ஆளும் சோசலிசத்தை நோக்கிய இயக்கத்தின் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டார்கள். ஆளும் சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கினர். மக்களைத் தொல்லை செய்யாதீர் என்ற வேண்டுகோளுடன் ஊர்வலங்களை நடத்தினார்கள். இந்நிலையில், சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்களின் கூட்டங்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கலைக்க வலதுசாரிகள் முற்பட்டனர். வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அமைதியைக் கொண்டு வர முயன்ற காவல்துறையின் அப்பகுதித் தலைமையகம் சூறையாடப்பட்டது. ஆறு காவல்துறை வாகனங்கள் இந்த வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டன.

பதிலடி

இந்த வன்முறைக் கும்பலின் வெறியாட்டங்களால் ஆளும் சோசலிசக் கட்சியினர் அசரவில்லை. அப்பகுதி மக்களைத் திரட்டினர். எதிர்க்கட்சிகளுக்கு பலம் அதிகமுள்ள பகுதி என்றாலும், அவர்களின் வன்முறையை அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சோசலிசக் கட்சியினரின் வேண்டுகோளுக்கு மக்கள் செவி சாய்த்தனர். வன்முறையை ஏற்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்தனர்.  பொலிவியாவின் மற்ற பகுதிகளிலும் அரசுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஒற்றுமைப் பேரணியை நடத்தியுள்ளனர். அமெரிக்க ஆதரவுடன் இவோ மொரேல்சின் அரசைக் கவிழ்த்த வலதுசாரிகளின் சட்டவிரோத அரசாங்கம், மக்கள் விரோத முடிவுகளை திணிக்கவும் செய்தது. மக்கள் தேர்வு என்று வந்தபோது சட்டவிரோத அரசைத் தங்கள் வாக்குகள் மூலம் மக்கள் தூக்கி எறியவும் செய்தனர். இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் அர்ஸ் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் தலைமையிலான அரசைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.

ஒற்றுமை

லத்தீன்-அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகள் அமைந்து வருவதால், அந்நாடுகளுக்கிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. முதன்முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதால் மூடப்பட்டிருந்த எல்லை திறக்கப்படுகிறது. பொலிவியா ஒரு பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடாக இருப்பதால், அதைக் குறிவைத்து அமெரிக்காவும், வலதுசாரிகளும் களத்தில் இறங்கியுள்ளார்கள். மொரேல்ஸ் அரசைக் கவிழ்த்தது போன்றதொரு முயற்சி நடக்கிறது என்று தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் அர்சும் குற்றம் சாட்டியுள்ளார்.