அதிர்ச்சியில் அமெரிக்க ராணுவக் கூட்டணி
கேப்டவுன், ஜூன் 5- ஐந்து நாடுகள் இடம் பெற்றுள்ள பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கு உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதால் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. தற்போது பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பி ரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டை யும், உலக மக்கள் தொகையில் 42 விழுக்காட்டை யும் இந்த அமைப்பு கொண்டுள்ளது. இதில் உள்ள நாடுகளுக்கிடையில் போடப்பட்டுள்ள பல்வேறு துறைகளுக்கான ஒப்பந்தங்கள் அமைதி யான முன்னேற்றத்தை உத்தரவாதப்படுத்துவ தாக அமைந்துள்ளன. இதனால் பல்வேறு நாடுகள் இந்த அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அந்த சமயத்தில் தென் அமெரிக்க நாடான வெனிசுலா இந்த அமைப்பில் இணைய விருப்பம் தெரி வித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த விருப்பத்திற்கு பிரேசில் தனது ஆதரவைத் தெரி வித்தது. பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதாரத் தளத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வ தற்கு இந்த இணைப்பு உதவும் என்று லூலா கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது வெனிசுலாவை பிரிக்சில் சேர்த்துக் கொள்வதற்கு சீனா மற்றும் ரஷ்யாவும் ஆதரவு அளித்துள்ளன. பிரிக்சில் இணைய விண்ணப்பித்துள்ள வெனிசுலாவை சீன அரசு பாராட்டியிருக்கிறது. இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சீனாவின் வெளி யுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “நமக்கு ஆதரவாக உள்ள பல கூட்டாளிகளை இந்த மகத்தான பிரிக்ஸ் குடும்பத்தில் முறை யாக இணைப்பதை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டார். வெனிசுலாவின் விருப்பம் குறித்துப் பேசிய ரஷ்யாவின் லத்தீன் அமெரிக்காவுக்கான வெளி யுறவுத்துறை பிரதிநிதி அலெக்சாண்டர் ஷெட்டி னின், “வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் அறிக்கை பிரிக்ஸ் அமைப்பின் மரியாதை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. தற்போதுள்ள சர்வதேச நிலைமையில் பிரிக்ஸ் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. எந்தவித மான தடைகளும், அழுத்தமும் இல்லாமல் சமமான ஒத்துழைப்பு என்ற மாதிரியை பிரிக்ஸ் முன்னிறுத்தியுள்ளது” என்றார். அமெரிக்கா அதிர்ச்சி பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கு 25 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் ராணுவக் கூட்டாளிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சிகள், புதிய ராணுவக் கூட்டணிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு அமைதியை முன்னிறுத்தி செயல்படும் பிரிக்ஸ் அமைப்பு தடை யாக இருக்கும் என்று அவர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ள நாடுகள்
1. அல்ஜியர்ஸ், 2. அர்ஜெண்டினா, 3. ஆப்கானிஸ்தான், 4. வங்கதேசம், 5. பஹ்ரைன், 6. பெலாரஸ், 7. வெனிசுலா, 8. எகிப்து, 9. ஜிம்பாப்வே, 10. இந்தோனேசியா, 11. ஈரான், 12. கஜகஸ்தான், 13. மெக்சிகோ, 14. நைஜீரியா, 15. நிகரகுவா, 16. ஐக்கிய அரபு அமீரகம், 17. பாகிஸ்தான், 18. சவூதி அரேபியா, 19. செனகல், 20. சிரியா, 21. சூடான், 22. தாய்லாந்து, 23. துனீசியா, 24. துருக்கியே(துருக்கி), 25. உருகுவே பிரிக்ஸ் அமைப்பு தொடங்கும்போது, பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள்தான் இடம் பெற்றிருந்தன. பின்னர் தென் ஆப்பிரிக்கா இணைந்தது. அதன்பிறகு, அமைப்பை விரிவாக்கம் செய்வது பற்றிய முடிவு எதையும் பிரிக்ஸ் எடுக்கவில்லை. அந்த முடிவை எடுத்தபிறகுதான் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது நடக்கும். அந்த முடிவுக்காக இந்த நாடுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.