மாஸ்கோ, ஜூலை 29- பன்முகத்தன்மை கொண்ட உலக அமைப்பு என்பதை ரஷ்யாவும், ஆப்பிரிக்க நாடுகளும் முன்னிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு நடைபெற்றது. இதன் முதல் உச்சிமாநாடு 2019 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடந்தது. தற்போது இரண்டாவது மாநாடு நடந்திருக்கிறது. 17 ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் உள்ளிட்ட 40 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்று நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் அத்தகைய நோய்களை எதிர்கொள்வதைப் பலப்படுத்துவது மற்றும் பயங்கரவாத மிரட்டல்களை ஒழிப்பது ஆகியவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு மாநாடு அறைகூவல் விடுத்திருக்கிறது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதையே இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தது காட்டுகிறது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.