world

img

தனியார் மயத்தால் விழி பிதுங்கி நிற்கும் மக்கள்: போராட்டக் களமாக மாறிய அமெரிக்க மாகாணம்

அமெரிக்காவின் "அதிகாரபூர்வமற்ற" மாகாணமாகக் கருதப்படும் பியூர்டோ ரிகோவில் தனியார் நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் மின்வெட்டுகளுக்கு எதிராக மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

பியூர்டோ ரிகோ என்பது கரீபியப் பகுதியில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். சுயாட்சி பெற்ற பகுதி என்றும், அமெரிக்காவின் அதிகாரபூர்வமற்ற மாகாணம் என்றும் அழைக்கப்படும் இந்தப் பகுதியில் சுமார் 45 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் யாருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. இது போன்ற மேலும் தீவுகளுக்கும் வாக்களிக்கும் உரிமை இதுவரையில் கிடைக்கவில்லை.

பியூர்டோ ரிகோ பகுதியில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இது தொடர்வதால் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள். மேலும், இந்த மின்வெட்டைக் காரணம் காட்டி, மின் கட்டணத்தைப் பெரிய அளவில் உயர்த்தும் முடிவை லுமா மின் நிறுவனம் எடுத்தது. இந்த நிறுவனம்தான் அப்பகுதியில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பது மகாப்பொய் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடுமையான கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டு ஆகியவற்றிற்கு எதிராகத் திரளும்படி மக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. பல நகரங்களின் மேயர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரோடு, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மக்களின் கொந்தளிப்பைக் கண்ட பியூர்டோ ரிகோ ஆளுநர் பெட்ரோ பியர்லுசி, தனியார் நிறுவனம் விதித்த புதிய கட்டணத்திற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார். தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைச் செய்துள்ளார்.

அரசின் மின்சக்தி நிறுவனம்தான் 2021 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் வரையில் மின் விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. அப்போது வரையில் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை. தனியார் நிறுவனமான லுமாவிடம் ஒப்படைத்ததில் இருந்து ஒரே ஆண்டில் ஏழு முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதோடு பெரும் அளவில் மின்வெட்டு இருக்கிறது. ஏப்ரல் 2022ல் ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அது பல நாட்கள் வரையில் நீடித்தது. சுமார் 15 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர்.

தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள மின் விநியோக உரிமை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் அரசு நிறுவனமே அதை ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. தனியார் மயத்தின் அவலத்தை அம்பலப்படுத்திய அனுபவங்களில் பியூர்டோ ரிகோவின் மின்துறை நெருக்கடியும் ஒன்றாக உள்ளது என்று அப்பகுதியில் எதிர்க்கட்சியினர்  சுட்டிக்காட்டுகிறார்கள்.