world

டொனால்டு டிரம்புக்குப் பெரும் பின்னடைவு அவரது ஆதரவாளர்கள் படுதோல்வி

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத் தேர்தல்களின் குடியரசுக் கட்சியால் இரண்டு அவைகளுக்கும் நிறுத்தப்பட்ட டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தோல்வியடைந்துள்ளார்கள்.

நவம்பர் 8 ஆம் தேதியன்று அமெரிக்காவின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. மேலும் பல்வேறு மாகாணங்களுக்கான ஆளுநர்களைத் தேர்வு செய்யும் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு இருக்கும் என்றும், குடியரசுக்கட்சி இரண்டு அவைகளிலும் பெரிய அளவில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் என்று ஊடகங்களும், கருத்துக் கணிப்புகளும் சொல்லி வந்தன.

ஜோ பைடனில் இரண்டு ஆண்டு கால நிர்வாகம் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த அதிருப்தி ஜனநாயகக் கட்சி மீது திரும்பும் என்றும், அக்கட்சி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தனது ஆதரவாளர்கள் பலரையும் டொனால்டு டிரம்ப் தேர்தலில் நிறுத்தினார். பெரிய வெற்றி என்ற செய்தி வெளியானவுடன், 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகத் தன்னை அறிவிக்கும் முடிவையும் எடுத்திருந்தார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் டொனால்டு டிரம்புக்கும், குடியரசுக் கட்சிக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. செனட்டுக்கான தேர்தல் முடிவுகளில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 50 இடங்கள் கிடைத்துள்ளன. நெவேடாவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காதரீன் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி செனட் அவையை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஆடம் லக்சால்ட், டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளராவர். 

அரிசோனா மாகாணத்தில் குடியரசுக்கட்சி பெரும் கவனம் செலுத்தினார்கள். அங்கு செனட்டுக்கான இடத்தில் ஜனநாயகக் கட்சியின் மார்க் கெல்லி மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் பெரும் பணக்காரரான பிளேக் மாஸ்டர்ஸ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். மிகவும் தாமதமாகவே இந்த முடிவு வந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் மார்க் கெல்லி வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது வெற்றி பெற்றுள்ள கெல்லி, நான்கு முறை விண்வெளிக்குச் சென்று வந்தவராவார். அவரது துணைவியார் கேபி கிஃப்போர்ட்ஸ், பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டில் கேபியைக் கொலை செய்யும் முயற்சி நடந்தது. தலையில் குண்டடி பட்டும் உயிர் பிழைத்தார். அத்தாக்குதலின்போது ஆறு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிகள் தாராளமாகக் கிடைப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்றை இருவரும் இணைந்து தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

டிரம்புக்குப் பின்னடைவு

கெல்லிக்கு எதிராக நின்ற மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பலரும் டிரம்பின் ஆதரவாளர்களாவர். 2020 ஆம் ஆண்டில் டிரம்ப்தான் ஜனாதிபதித் தேர்தலில் வென்றார் என்று இவர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள். இதைத் தற்போதைய தேர்தலிலும் முன்னிறுத்தினார்கள். டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் 15 பேருக்கும் மேல் தோல்வியடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாறாக, கெல்லி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டம், விலையுயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தேர்தலில் முன்னிறுத்தினார்கள். பைடனின் நிர்வாகம் குறித்த அதிருப்தியை அவர்களுக்கும் வெளிப்படுத்தினர். தேவைப்பட்டால் ஜனநாயகக் கட்சியின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 

பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரையில் வெளியான முடிவுகளில் குடியரசுக்கட்சிக்கு 211 இடங்களும், ஜனநாயகக் கட்சிக்கு 203 இடங்களும் கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு மொத்தம் 218 இடங்களைப் பெற வேண்டும்.