world

img

காசாவில் 80 சதவிகிதத்தை நெருங்கும் வேலையின்மை: சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவிகிதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனர்களுக்கான நிவாரண முகாம்களாகவும், தங்குமிடமாகவும், ஐ.நா.பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சர்வதேச சட்டங்களை மீறி அந்த பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் இரவில் குண்டுவீசி 14 குழந்தைகள் உட்பட 30 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமீபத்திய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவிகிதத்தை நெருங்குகிறது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் வேலையின்மை கிட்டத்தட்ட 32 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அதோடு அப்பகுதி மக்கள் ஊதிய குறைபாடு என்ற பிரச்சினையையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், காசா மக்கள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.

அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 36,731 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 83,530 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.