world

img

மேற்குலகு மிரட்டல்களை எதிர்கொள்வோம் - வடகொரியா உறுதி

மேற்கு நாடுகளின் மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையில் வடகொரியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் விஞ்ஞானிகளுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய கிம் ஜோங் உன், மிகவும் தீவிரமான, யாராலும் தடுக்க முடியாத ராணுவ பலத்தை உருவாக்கப் போகிறோம். மேற்கத்திய நாடுகள் தரும் மிரட்டல்களுக்கு பதிலடி தரும் வகையில் இது அமையும் என்றார்.
சில நாட்களுக்கு முன்புதான் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை மேற்கொண்டது. இதுதான் வடகொரியா நடத்திய முதல் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் சக்தியுள்ள ஏவுகணை சோதனையாகும். தங்கள் ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியாக இந்த ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்து வருகிறது. கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணை சோதனை மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் 12 ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் தானாகவே முன்வந்து சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்ட வடகொரியா, தற்போது மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்கள் அதிகரித்துள்ளதால், தளர்வுகளை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது.  இதன் அடிப்படையில்தான் நடப்பாண்டில் ஏவுகணை சோதனைகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. இத்தகைய சோதனைகளின்போது அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு விஞ்ஞானிகளை ஜனாதிபதி கிம் ஜோங் உன் உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஹுவாசாங்-17 என்று பெயரிட்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணையை சில நாட்களுக்கு முன்பாக வடகொரியா சோதனை செய்தது. இதுவரையில் செல்லாத தொலைவுக்கு இந்த ஏவுகணை சென்றதாக சோதனையின் நிறைவு அறிக்கைகள் சொல்கின்றன. இது குறித்துக் கருத்து தெரிவித்த கிம் ஜோங் உன், இதைவிட சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு ராணுவ பலம் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.