பெய்ஜிங்/பிரேசிலியா, மே 2- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சி, ஜி7 நாடுகளைப் பொருளாதார ரீதியில் பின்னுக்குத் தள்ளியுள்ளது. உலகப் பணக்கார நாடுகள் என்ற பட்டியலில் முன்னணியில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 அமைப்பை உரு வாக்கியுள்ளன. இதில் ரஷ்யாவும் இணைந்திருந் தது. அப்போது ஜி8 நாடுகள் என்று அழைக்கப் பட்டன. ரஷ்யா அதிலிருந்து வெளியேற்றப்பட்ட தால் ஜி7 என்ற பெயருடன் மற்ற நாடுகள் தொடர்கின்றன. உலகப் பொருளாதார சூழலை இந்த நாடுகள்தான் தீர்மானித்து வந்தன. இந்த நாடு களின் பொருளாதாரத்தில் அதிர்வலைகள் இருந்தால், உலகப் பொருளாதாரமே நெருக்கடிக்கு உள்ளாகும். 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர்,
அமெரிக்கா வின் ஒற்றை மேலாதிக்கம் தொடங்கியது. ஆனால், 2009 ஆண்டில் நடந்த முதல் பிரிக் மாநாடு உலக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன. 2010 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் தென் ஆப்பிரிக்கா இணைந்ததால் பிரிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரம் ஆகியவை பிரிக்ஸ் நாடுகளின் பலமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி மற்றும் பலன்களால் பல நாடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியா, அல்ஜீரியா, அர்ஜெண்டினா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் பற்றிய தனது “ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியை பிரிக்சால் சமாளிக்க முடியுமா?” என்ற தலைப்பிலான கட்டுரையில், தற்போது எழுந்துள்ள நிலைமை மிகப்பெரிய வாய்ப்பு களும், சவால்களும் அடங்கியதாகும் என்று பாலஸ்தீன-அமெரிக்க செய்தியாளர் ராம்சி பரோடு குறிப்பிட்டிருக்கிறார். உலக புவிஅரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பிரிக்ஸ் அமைப்புக்கு அது வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளை யில், தனது வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டு, விரிவாக்கம் செய்வது சவாலான பணியாகும்.
பிரிக்ஸ் முந்தியது
அண்மையில் வெளியான நிதித்துறைகளின் அறிக்கைகள்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் உலகின் மிகப்பெரிய அமைப்பாக பிரிக்ஸ் மாறியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யானது, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 31.5 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது. இதே வேளையில், ஜி-7 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30.7 விழுக்காடாக இருக் கிறது. புதிய நாடுகள் இந்த அமைப்பில் இணைந் தால், உலகின் பாதியை விரைவில் எட்டிவிடலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். வளரும் நாடுகளுக்கு கடன் தருகையில், ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டும் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும் வழக்க முள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்று அரசியல் பிரச்சனைகளை எல்லாம் கடன் வழங்கும் போது இந்த நிதி நிறுவனங்கள் பேசுகின்றன. இவ ற்றைப் பேசிவிட்டு, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகள் அனைத்தையும் தனியார் மய மாக்க வேண்டும் என்று நிபந்தனைகளைப் போடு வார்கள். மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குதான் என்பது தனியார் மயமாக்கும் நாடுகளுக்கு கடன்களை வாரி வழங்குவதில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் புதிதாக உரு வாக்கியுள்ள புதிய வளர்ச்சி வங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்ற முதலீட்டில் அந்த வங்கியைத் தொடங்கியுள்ளார்கள். பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி டில்மா ரூசெப் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடன்களுக்கு மாற்று ஏற்பாடுகளைத் தேடி வரும் நாடுகளுக்கு இந்த வங்கி வடிகாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.