ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் நானோ, இஷிகாவா விலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவி லுள்ள ஹோன்ஷூ தீவுப் பகுதியில், கடலுக்கடியில் 13 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 12.40 மணிக்கு அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை 30 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால், அந்நாட்டு மக்கள் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், 5 முதல் 7 மீட்டர் அளவு கடல் அலைகள் உயரலாம் என கூறப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இந்த சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் உடனடியாக மதிப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.