world

img

அகதிகள் முகாமில் குண்டு மழை

காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்களில் ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் இஸ்ரேல்  ராணுவம்  தொடர் குண்டு மழை பொழிந்து வருகிறது. டெய்ர் எல்-பலாஹ்  மற்றும் ஜவேதா ஆகிய நகரங்களில் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் மற்றும் இஸ்ரேல் நடத்தும்  போர்க்குற்றங்கள் வெளி உலகிற்கு தெரியக்கூடாது என காசா முழுவதும் இணைய சேவையை துண்டித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். 

இந்நிலையில் காசா நகரம் சுற்றி வளைக்கப்பட்டு  வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு 48 மணி  நேரத்திற்குள் காசா நகருக்குள் இஸ்ரேல் ராணுவம் முழுமையாக நுழையும் என இஸ்ரேல் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல்  போர் விமானங்கள் இரண்டு அகதிகள் முகாம்கள் மீது குண்டு வீசியதில் 88 பேர் கொல்லப்பட்ட னர்; நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். 

அக்டோபர் 7 அன்று துவங்கிய போரில் 4500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட  9,700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐநா அமைப்பைச் சேர்ந்த 88 பணியாளர்களும் ,காசாவைச் சேர்ந்த  175  மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காசாவிற்குள் நடந்து வரும் தரைவழித் தாக்குதலில் பல இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமையின் தீவிரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி உள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்க்கன் இஸ்ரேல்,ஜோர்டான்,பாலஸ்தீன மேற்கு கரை, துருக்கி ,ஈராக் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இதே வேளையில் பதற்றம் தணியாமல் இருக்க அமெரிக்கா தனது அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை மத்திய கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.