world

img

இலங்கை அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் 

இலங்கையில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். மேலும் அரசு தொலைக்காட்சியையும் தங்கள் வசப்படுத்தி உள்ளதாக செய்திகள்  வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலையில் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் வேறு வழியின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று கோரி வந்தனர். 
மஹிந்த ராஜபட்சவுக்கு பின்னர் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்று கூறி மீண்டும் மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்
இந்நிலையில் கடந்த சனியன்று அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறிய நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கைப்பற்றினர். இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, அதிபா் கோத்தபய இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று கோத்தபய லட்சத்தீவுக்கு தப்பி ஓடியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜ பக்ச வுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும், அனைத்து கட்சிகள் அடங்கிய ஒரு அரசு அமைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர். 
தற்போது போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரணில் விக்கிரம சிங்கே இடைக்கால பிரதமராக இருப்பார் என்று கோத்தபய தன்னிடம் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினியை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் தொடர்ச்சியாக இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவு வருகிறது.