world

img

இங்கிலாந்து நீதிமன்றத்தில் கியூபாவுக்கு வெற்றி!

கடன் தொடர்பாக கியூபா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கொன்றில், கியூபாவின் தரப்பில் எந்தவிதத் தவறும் இல்லை என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கியூபாவில் இருந்து இயங்கி வந்த அமெரிக்காவின் பி.என்.சி.(BNC) வங்கி, ஐரோப்பிய வங்கிகளில் இருந்து இரண்டு கடன்களைப் பெற்றது. கிட்டத்தட்ட  7 கோடியே 80 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தக் கடன்களை அந்த வங்கி திரும்பச் செலுத்தவில்லை. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, 2017 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைத் தனது தளமாகக் கொண்டு இந்த வங்கி இயங்கி வந்தது. இந்த வங்கி பெற்ற கடன்கள் வாராக்கடன்களாக மாறியது.

இந்நிலையில், இந்தக் கடன்களை வழங்கியது தாங்கள்தான் என்று சி.ஆர்.எப். என்ற நிதி நிறுவனம் லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பிரிட்டனின் கேமேன் தீவுகளில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தக் கடன்களை மூன்றாவது தரப்புக்கு மாற்றப் போவதாக இந்த நிறுவனம் அறிவித்தது. அவ்வாறு மாற்றுவதற்கு கடன் வாங்கிய வங்கியும், கியூப அரசும் ஒப்புதல் தர வேண்டும் என்று கோரியது. ஆனால், கியூப அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டது.

வங்கியும். கியூப அரசும் ஒப்புதலைத் தர வேண்டும் என்று சி.ஆர்.எப். நிறுவனம் லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. 1984 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தக் கடன்களுக்கு கியூப அரசு பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கிடைத்துள்ளது. கடனை வழங்கும் முன்பாக, கியூப அரசாங்கத்திடம் ஒப்புதலை சி.ஆர்.எப். நிதி நிறுவனம் பெறவில்லை என்பதைத் தீர்ப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி சாரா காக்கெரில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கியூபா மீது தவறில்லை

கடன் வாங்கிய பி.என்.சி. வங்கியின் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கடன்களுக்கான உரிமையை மாற்றித் தருவதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள். அந்த அதிகாரி மீது ஏற்கனவே கியூப அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்தக் கடனுக்குத் தன்னால் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என்று கியூப அரசு சொல்வதற்கு, இந்த மோசடி விவகாரம் நியாயமான காரணமாகவே அமைந்திருக்கிறது என்றும் சாரா காக்கெரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறிய அவர், "இந்த அதிகார எல்லைக்கு வெளியில் கியூபா சென்றுவிட்டது. இனிமேல் இந்த வழக்கு, பி.என்.சி. வங்கி மீது மட்டுமே தொடரும். தங்கள் மீதான சி.ஆர்.எப். நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அந்த வங்கி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தனது தரப்பு வாதங்களை வைக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

பழி சுமத்தும் திட்டம்

வாங்கிய கடன்களைப் பிறருக்கு மாற்றிவிட்டதில் பெரும் மோசடி நடந்துள்ளது என்று கியூப அரசு தனது தரப்பு வாதத்தை வைக்கும்போது குறிப்பிட்டது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள வங்கி, கியூபாவையோ அல்லது கியூப அரசையோ பிரதிநிதித்துப்படுத்த முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தனர். கியூபா மீது குற்றம் சாட்டி, கடனை அந்நாட்டு மக்கள் மீது சுமத்தும் திட்டமாகவே இது இருந்தது. கடன் வழங்கிய இரண்டு ஐரோப்பிய வங்கிகளும் இந்த வழக்கில் பெரும் அக்கறை காட்டவில்லை.

அதோடு, இதுபோன்ற கடன்கள் வழஙகப்பட்டு, அவற்றைத் திரும்பப் பெறுகிறோம் என்று சொல்லிக் கொண்டு இறையாண்மை கொண்ட நாடுகளில் இருந்து கொள்ளையடிக்கவே பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ள கியூபத் தரப்பு, "எங்கள் நாட்டின் கடன்களை எப்போதும் நாங்கள் நிராகரித்ததில்லை. சட்டரீதியாகக் கடன் வழங்குபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் உடையவர்களாகவே இருக்கிறோம். வேண்டுமென்றே கடனை எங்கள் நாட்டின் மீது திணிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்திருக்கிறது.