பியூனஸ் அயர்ஸ், ஏப்.28- சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டாலர் வழியாக பணம் செலுத்து வதற்குப் பதிலாக யுவானிலேயே செலுத்த அர்ஜெண்டினா முடிவெடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் நடைபெறும் வர்த்தகத்திற்கு டாலர் வழியாகப் பணம் செலுத்துவதே அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. இன்றும் பெரும்பாலான வர்த்தகம் அப்படியே நடந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் ராணுவக் கொள்கையால் டாலரின் மதிப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை இந்த திடீர் மாற்றங்கள் ஏற்படுத்துவதால், பல நாடுகள் டாலருக்குப் பதிலாக மாற்று நாணயங்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அர்ஜெண்டி னாவுக்கான சீனத் தூதுவர் சோ சியாவோலி யைச் சந்தித்த அர்ஜெண்டினாவின் பொருளா தாரத்துறை அமைச்சர் செர்ஜியோ மஸ்ஸா, ‘‘அடுத்த மாதத்தில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இறக்குமதிக்கு சீன நாணயமான யுவான் மூலமாகப் பணம் செலுத்த முடியும்.
இவ்வாறு யுவானில் செலுத்துவதால் அர்ஜெண்டினாவின் அந்நியச் செலாவணி இருப்பு குறித்த கருத்திலும் மாற்றங்கள் ஏற்படும்’’ என்று குறிப்பிட்டார். இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் டாலரில் இருந்து யுவானுக்கு மாறுவதால், ஏற்றுமதி-இறக்குமதி செயல்பாடுகளை நல்ல அளவிலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அதிகரிப்பதிலும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது அவசியமானதாக மாறியிருக்கிறது. உலக அளவில் வர்த்தகப் பரிமாற்றத்திற்கான நாணயங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டாலர் ஆட்டம் காண்கிறது. டாலரை நம்பியிருப்பதால் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேரிடுவதால், பல நாடுகள் டாலரைக் கை கழுவும் நடவடிக்கையில் இறங்கிவிட்டன. உலக வர்த்தகப் பரிமாற்ற நாணயம் என்ற டாலரின் அந்தஸ்துக்கான நாட்கள் எண்ணப் பட்டு வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறு கிறார்கள். அவரவர் நாணயங்களைப் பயன்படுத்துவதால், இருதரப்பு உறவுகளும் பலப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
வங்கதேசம்
இந்தியாவுடனான வர்த்தகத்தில் டாலரைச் செலுத்தாமல் ரூபாயில் செலுத்தும் முடிவை வங்கதேசம் எடுத்தது. டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயத்தைச் செலுத்தும் 19-ஆவது நாடாக வங்கதேசம் உருவாகியிருக்கிறது. இரு நாடுகளும் அவரவர் நாணயங்களைக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைச் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளன. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்துமே டாலரைக் கை கழுவும் முடிவுக்கு சென்று கொண்டிருக்கின்றன. இந்தப் புதிய நிலைமை குறித்துக் கருத்து தெரிவித்த மற்றொரு பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடான ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ‘‘டாலர் அல்லாத நாணயங்களைக் கொண்டு வர்த்தகம் மேற்கொள்வது என்பதைத் தடுத்து நிறுத்த முடி யாது. டாலருக்கு மாற்றைப் பல்வேறு நாடுகள் தேடிக் கொண்டிருக்கின்றன என்பதே அதற்குக் காரணமாகும். அவரவர் தேசிய நாணயத்தைக் கொண்டு வர்த்தகம் மேற்கொள்வது என்பது திரும்பப் பெற முடியாத முடிவாக மாறி யிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். சீனா மற்றும் ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் ஈரான் டாலரைக் கைவிட்டு விட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.