முன்னோடி தொழிற்சங்கத் தலைவர்!
தோழர் சர்க்கரைச் செட்டியார், ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பரிதிமாற்கலைஞரிடம் தமிழ் கற்றார். ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞராகச் செயல்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் சென்னை நகர செயலாளராக இருந்தார். நீதிக் கட்சியில் ஓராண்டு இணைந்திருந்தார். அதன் பின் வாழ்வின் இறுதி வரை தொழிலாளர் தலைவராகவே தொண்டாற்றினார்.
தமிழகத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தில் திருவிகவுடன் பெரும்பங்காற்றினார். ரிக்சா தொழிலாளர், அப்பளத் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர், கள் இறக்கும் தொழிலாளர், மூக்குப் பொடித் தொழிலாளர் சங்கம் என பற்பல சங்கங்களில் அவரது பங்குண்டு.
ஏஐடியுசியின் மாநிலத் தலைவராக, துணைத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையில் தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்றார்.
மாநகராட்சி உறுப்பினராக, மேயராக, சட்டமேலவை உறுப்பினராக சிறப்பாகச் செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956இல் முன்மொழியப்பட்ட போது சிறந்ததோர் உரையாற்றினார். எளிமையின் சின்னமான அவரை ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்திய போது, நீதிபதி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அப்போது, என்னிடம் உள்ளது வேட்டியும், கோவணமும், சட்டையும், புத்தகமும் தான் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறினார். இதனால் மிரண்ட நீதிபதி அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் எஸ்.ஏ.டாங்கே, இஎம்எஸ்., பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே., கே.டி.கே., உள்ளிட்ட தலைவர்களுடன் பணிபுரிந்தார். 82 வயதில் உயிர் துறக்கும் வரை தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கவுமே வாழ்ந்தார்.
முன்னோடித் தலைவரை பின்பற்றி முன்னேறுவோம்!