what-they-told

img

தடகளத்தில் ஜொலிக்கும் மதுரை வீரன்!

ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா இதுவரை ஒரு தங்கப்பத்தகம் கூட வென்றதில்லை. இத்தனைக்கும் இந்தியாவின் ‘பறக்கும் மனிதன்’ என போற்றப்பட்ட மில்கா சிங், பி.டி.உஷா போன்றவர்கள் இருந்தும் பதக்க கனவு நிறைவேறவில்லை.  18 வயதில் ஆசியாவின் ஜூனியர் ‘சிறந்த தடகள வீரர்’ விருதை வென்று முதல் இந்தியரான தமிழ்நாட்டின் தடகள நம்பிக்கை நட்சத்திரம் செல்வ பிரபு, இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது இலக்காக கொண்டு முன்னேறி வருகிறார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் செல்வ பிரபு. இவரின் தந்தை திருமாறன் ஒரு விவசாயி. அம்மா சுதா. பள்ளிப் படிப்பை முடித்து திருச்சி தனியார் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படித்து வருகிறார்.  விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதுவே வாழ்க்கையாக, தொழில் முறை விளையாட்டாக மாறும் என்று நினைத்து பார்க்கவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் போது, இவருக்குள் இருந்த விளையாட்டு திறமை ஆசிரியர்கள் மூலம் வெளிப்பட்டது. தொடக்கத்தில், பள்ளிகள் அளவிலான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். அதன் பிறகே, அவரை முறையான பயிற்சியில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அவரது முதல் பயிற்சியாளர் ஜெயந்தன் என்றாலும் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் தினசரி அதிகாலை பயிற்சி எடுத்துள்ளார்.

ஊக்கம் கொடுத்த அரசு விடுதி

பள்ளி மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றதால் திருச்சியில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் வாய்ப்பும் அரசின் இலவச பயிற்சியும் கிடைத்தது. இதன் மூலம், பெற்ற வெற்றிகள் பிரகாசமான களத்தை அவருக்கு அமைத்துக் கொடுத்தது. இதனை அடுத்து, மும்முறை தாண்டுதல் என்று அழைக்கப்படும் ‘ட்ரிபிள் ஜம்ப்’ பக்கம் மாறி இருக்கிறார். தனது கடின உழைப்பின் மூலம் மாநில மற்றும் தேசிய அளவில் முத்திரை பதித்து சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகிறார். 

கியூபா பயிற்சியும் தங்கமும்


இந்தியாவில் நடைபெறும் கேலி இந்தியா போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அதற்கு முன்பு, தேசிய தடகளத்தில் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 2022 ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டிற்குச் சென்று சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையுடன், தடகளத்தில் கொடி கட்டி பறக்கும் ஜமைக்கா, கென்யா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களோடு களத்தில் இறங்கினார். இதில், 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், இவரை விட வயதில் மூத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் நூலிழையில் பதக்க வாய்ப்பு பறிபோனது. ஆனாலும் நான்காவது இடத்தை பிடித்து அசத்தினார். இந்தப் போட்டிக்காக கியூபாவில் மூன்று மாத காலம் தங்கி கடுமையான பயிற்சி எடுத்துள்ளார்.  சமீபத்தில், உலக தடகளப் போட்டிக்காக கிரீஸ் நாட்டிற்கு சென்றார். இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீரரும் இவரே. இப்போட்டியில் தனது வெளிநாட்டு (கியூபா) பயிற்சி அனுபவங்களை முழுமையாக பயன்படுத்தினார். இந்த முறை சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் இலக்கை நோக்கி துல்லியமாக சென்றார். சர்வதேச வீரர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 16.79 மீட்டர் நீளத்திற்கு தாண்டி முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார். 

‘ஆசியாவின் சிறந்த தடகள வீரர்’

தேசிய போட்டி, சர்வதேச போட்டி என அனைத்திலும் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் இவர், பதக்கமும் பரிசும் கிடைக்கவில்லை என்றாலும் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு தன்னை மெருகேற்றி வருகிறார் செல்வ பிரபு. இதனால், 2023-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என்கிற உயரிய கவுரத்தை செல்வ பிரபுக்கு ஆசிய தடகள சம்மேளனம் வழங்கியுள்ளது.

ஒலிம்பிக் கனவு...

தற்போது உலக தடகள வரிசையில் 39-ஆவது இடத்தில் உள்ள செல்வ பிரபு, இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான தமிழ்நாட்டின் பிரவீன் சித்திரைவேல் 17.34, கேரளாவின் அபூபக்கர் 17.19 மீட்டர் நீளம் தாண்டி உலக தடகளச் சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது.  17.20 மீட்டர் தூரத்திற்கு தாண்டி அந்த அந்த இடத்தை பிடித்து, உலக சீனியர் தடகளத்திலும் தடம் பதித்து பதக்கம் வெல்ல வேண்டும். அதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.  கர்நாடக மாநிலம் பெல்லாரி விளையாட்டு பயிற்சி மையத்தில் தங்கி இருக்கும் செல்வ பிரபு, கியூபாவின் ஒலிம்பிக் பதக்க வீரர் யோன்ட்ரிஸ் பெட்டான் சோஸிடம்  சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார், ஒலிம்பிக் பதக்க வேட்கையோடு...

-சி. ஸ்ரீராமுலு