what-they-told

img

கன்னியாகுமரி கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நாகர்கோவில், ஏப்.21- கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி கடலில்  கடல் உள் வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், ராட்சத அலைகள், கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வியாழக்கிழமை மதியம் முதல்  கடல் திடீர் என்று சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மதியம் 2 மணி முதல் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. விவேகானந்தர் பாறையில் இருந்த 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசரஅவசரமாக படகில் ஏற்றி கரைக்கு கொண்டு  வரப்பட்டனர். அப்போது அலையில் சிக்கிய விவே கானந்தா படகு சுவரில் மோதி சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையும்  2-ஆவது நாளாக படகுப் போக்குவரத்து பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.  அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு  காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுபோக்குவரத்து மதியம் ஆகியும் தொடங்கவில்லை. கப்பல் போக்குவரத்து கழக படகுத் துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.