கொச்சி, அக்.30- கேரளத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் கடலோர பகுதி மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதி களில் சனியன்று (அக்.29) வடகிழக்கு பருவ மழை துவங்கியது. புதன்கிழமை (நவ.2) வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி நகரில் எம்.ஜி.சாலையில் கடை களில் வெள்ளம் புகுந்தது. சாக்கடைகள் நிரம்பி சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: அக்.31: திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி. நவ.01: திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி. நவ.02: திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு. நவ.03: திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம்.