சென்னை,பிப்.19- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் புதனன்று(பிப்.129) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பேரவை விதி 110-ன் கீழ் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்ட அவர், அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும் போது, தலா இரண்டு லட்சம் ரூபாய் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும் என்றும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். இதன் மூலம் அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும். சமூக பாதுகாப்புத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்குட்படாத ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். இதைத் தவிர, சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் என்றும் முதல்லர் கூறினார்.