கோவிட் 19 வைரஸை எதிர்த்து இந்தியா ஒரே மனிதனாக நின்று போராட வேண்டிய தருணம் இது. எனினும் இந்த சூழ்நிலையிலும் சங் பரிவாரத்தின் சில பிரிவுகள் மதரீதி யாக மக்களை பிளவுபடுத்தும் கொடூர செயலை செய்கின்றன. சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல தப்ளிக் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பு தில்லி நிஜாமூதின் பகுதியில் நடத்திய ஒரு மாநாடு அல்வா கிடைத்தது போல இவர்களுக்கு அமைந்துவிட்டது. ‘லவ் ஜிகாத்’ போல ‘கொரோனா ஜிகாத்’ என புதிய பிளவுவாதத்தை கையில் எடுத்துள்ளனர். சங் பரிவாரத்தினர் கூறுவது போல இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்த சதியில் ஈடுபட்டனர் எனில் ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் திரும்பினர்? அங்கு சென்ற வர்களுக்கும் ஏன் வைரஸ் பாதிப்பு உருவாக வேண்டும்? இஸ்லாமியர்களுக்கும் வைரஸ் பரப்பும் சதியில் அவர்கள் ஈடுபடுவார்களா? இது அபத்தமான குற்றச்சாட்டு அல்லவா? எனவேதான் சங் பரிவாரத்தின் கொடுமையை விளக்கும் கொரோனாவே பேசுவது போன்ற கீழ்கண்ட மீம்ஸ் வார்த்தைகள் மிகவும் பொருத்தமானதாக அமைந்துவிட்டன: “நான் சீனாவில் தோன்றினேன்; என்னை யாரும் பவுத்தன் என்று கூறவில்லை; நான் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றேன்; என்னை யாரும் கிறித்துவன் என கூறவில்லை; இஸ்ரேலுக்கு சென்றேன்; யாரும் என்னை யூதன் என அழைக்கவில்லை; இந்தியாவிற்குள் வந்தேன்; என்னை முஸ்லீமாக ஆக்கிவிட்டனர்”
தப்ளிக் ஜமாத் ‘ஜிகாத்’ பணியில் ஈடுபடுகிறதா?
பலர் நினைப்பது போல இஸ்லாம் ஒரு முகத்தன்மை கொண்டது அல்ல; ஏனைய உலக மதங்களான கிறித்துவம்/இந்து மதம்/ பவுத்தம் போல இஸ்லாமும் பன்முகத்தனமை கொண்டது. சன்னி/ஷியா/அகமதி/ சுஃபி என பல பிரிவுகளையும் நடைமுறைகளையும் கொண்டது இஸ்லாம். எனினும் சன்னி பிரிவுதான் மிகப்பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகிறது. தப்ளிக் ஜமாத் இதில் சன்னி பிரிவின் சில நடைமுறைகளை முஸ்லீம்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. 1920ம் ஆண்டு மவுலானா முகம்மத் இலியாஸ் என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. முஸ்லீம்களில் கீழ்மட்ட மக்களுக்கும் குறிப்பாக உழைப்பாளிகளுக்கும் இஸ்லாத்தின் கோட்பாடுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. நாளடைவில் இந்த அமைப்பு நூற்றுக்கும் அதிகமான தேசங்களில் கிளைகளை உருவாக்கியது. மதச்சார்பின்மை அணுகுமுறையில் இருந்து நோக்கினால் தப்ளிக் ஜமாத்தின் கோட்பாடுகள் இரண்டு முரண்பாடுகளை கொண்டதாக இருப்பதை அறியலாம்.
ஒரு பக்கம் தர்கா கலாச்சாரத்தை உள்ளடக்கிய சுஃபி பிரிவை தப்ளிக் ஜமாத் எதிர்க்கிறது. சுஃபி கலாச்சாரம் இஸ்லாத்தின் பரிசுத்த தன்மையை பாதிக்கிறது என்பது தப்ளிக்கின் கோட்பாடு ஆகும். ஆனால் சுஃபி கலாச்சாரம்தான் அனைத்து மதங்களையும் அரவணைக்கும் தன்மை கொண்டது. தப்ளிக் ஜமாத்தின் தலைமையகம் அமைந்த நிஜாமூதின் பகுதி யில்தான் உலகப்புகழ் பெற்ற நிஜாமூதின் அவுலியா எனும் சுஃபி ஆன்மீக பெரியவரின் தர்காவும் உள்ளது. அவரது பெயரால்தான் அந்த பகுதியும் தில்லியின் முக்கிய ரயில்வே நிலையமும் அழைக்கப்படுகிறது. மறுபுறத்தில் தலிபான்/அல்கொய்தா/ ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தப்ளிக் ஜமாத் மிகக் கடுமையாக எதிர்க்கிறது.
இந்த அமைப்புகள் திருக்குரானுக்கு எதிராகவும் நபிகள் நாயகத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என பொது வெளியில் கடுமையாக விமர்சனத்தை முன்வைக்கும் அமைப்பு தப்ளிக் ஜமாத். இதனாலேயே மேற்கண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு களால் தப்ளிக் ஜமாத் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு முஸ்லீம் அல்லாத வர்களை இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்ய முனைவது இல்லை. மாறாக முஸ்லீம்களிடையே மட்டும்தான் இஸ்லாத்தின் தூய்மை குறித்து பிரச்சாரம் செய்கிறது. எனவே தப்ளிக் ஜமாத் அமைப்பை ஜிகாத்துடன் இணைத்து செய்யப்படும் பிரச்சாரம் உண்மை அல்ல என்பது மட்டுமல்ல; விஷமத்தனமானதும் ஆகும்.
ஊரடங்கின் பொழுது என்ன நடந்தது?
மோடி மார்ச் 19ம் தேதி, மார்ச் 22 அன்று “மக்கள் ஊரடங்கை” கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தார். அப்பொழுது சுமார் 3500 பேர் தப்ளிக் ஜமாத்தின் கட்டிடத்தில் இருந்தனர். மோடியின் அறிவிப்புக்கு பின்னர் நிலைமையின் கடுமைத் தன்மையை உணர்ந்த தப்ளிக் அமைப்பு சுமார் 2000 பேரை அங்கிருந்து திருப்பி அனுப்பியது. ஆனால் 24ம் தேதி 3 வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 1500 பேர் உடனே திரும்பி செல்ல வாய்ப்புகள் இல்லாத சூழல் உருவானது.
இதன் பின்னர் தப்ளிக் அமைப்பினர் தில்லி மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் உண்மை நிலைமையை தெரியப்படுத்தினர். மேலும் ஏனையோரையும் திருப்பி அனுப்ப அனுமதி கோரினர். போக்குவரத்தை ஏற்பாடு செய்துவிட்டு அனுமதிக்கு அணுகுமாறு அதிகாரிகள் கூறினர். வாகனங்களின் பதிவு எண் உட்பட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி ஜமாத் அமைப்பினர் மீண்டும் அதிகாரிகளை அணுகினர். ஆனால் அபொழுது அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக ஜமாத் அமைப்பினர் கூறுகின்றனர். இந்த சூழலில் மீதமிருந்தவர்களை ஜமாத் கட்டிடத்திற்குள் வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
தப்ளிக் ஜமாத் செய்த தவறு
அதே சமயத்தில் தப்ளிக் ஜமாத் செய்த இரண்டு முக்கிய தவறுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. தில்லி அரசாங்கம் மார்ச் 16ம் தேதியே மத நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடுவதை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு பின்னரும் ஏன் சுமார் 3500பேர் தப்ளிக் கட்டிடத்தில் இருந்தனர் என்பது முக்கிய கேள்வி. 16ம் தேதியே தப்ளிக் தலைமை விழித்திருந்தால் அனைவரையும் திருப்பி அனுப்பியிருக்க லாம். ஆனால் அந்த கட்டத்தில் நிலைமையின் ஆபத்து போதுமான அளவு உணரப்படவில்லை. இரண்டாவது தவறு ஏன் வெளிநாட்டினரை வரவழைத்தனர் என்பது! பிப்ரவரி மாதத்திலேயே தாய்லாந்து, இந்தோனேஷியா, சவூதி அரேபியா ஆகிய தேசங்களில் கோவிட் 19 வைரஸ் பரவ தொடங்கி விட்டது. அத்தகைய சூழலில் அந்த நாட்டினரை இங்கு வரவழைத்தது என்பது மிக தவறான செயல் ஆகும். ஏன் இந்த தவறு நடந்தது? மத நடவடிக்கைகளை நடத்தினால் ஒன்றும் ஆகிவிடாது; கடவுள் பார்த்துக் கொள்வார் எனும் அதீத நம்பிக்கைதான் இதற்கு காரணம். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; பல மதத்தினரும் இத்தகைய தவறுகளை செய்து வைரஸிடம் சிக்கி கொண்டுள்ளனர்.
தப்ளிக் ஜமாத் அமைப்பு மீது மட்டும் தாக்குதல் ஏன்?
தப்ளிக் ஜமாத் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை எனும் குற்றச்சாட்டில் நியாயம் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் ஏன் இந்த அமைப்பு மட்டும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது? இதே கால கட்டத்தில் பல மத நிகழ்வுகள் நடந்துள்ளன. பல மத அமைப்புகளின் கட்டிடங்களில் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
►பிரதமர் ஊரடங்கு அறிவித்த பிறகுதான் அயோத்தியில் உ.பி. முதல்வர் ராமநவமி நிகழ்வுகளை நடத்தினார். அதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
► இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதல் வைரஸ் பாதிப்பு அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர்தான் ஜக்கி வாசுதேவ் நடத்திய பிரம்மாண்டமான சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல வெளி நாட்டினரும் கலந்து கொண்டனர்.
► இந்தியாவின் பல இடங்களில் பல திருவிழாக்கள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
► பிரபல பாடகி கனிகா கபூர் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கனிகா கபூருக்கு 5 முறை பரிசோதனை செய்த பிறகும் கோவிட் 19 வைரஸ் உள்ளது என முடிவு கிடைத்துள்ளது. ஆனால் அவர் மீதோ அல்லது பங்கேற்பாளர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை.
► மக்கள் ஊரடங்கு அன்று மாலை ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் மோடிக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் நடத்தினர். சில இடங்களில் ஐ.ஏ.ஸ்./ஐ.பி.எஸ். அரசு அதிகாரிகளே தலைமை தாங்கினர்.
இது குறித்து எவரும் பேசுவது இல்லை. ஆனால் தப்ளிக் ஜமாத் அமைப்பை மட்டும் தனிமைப்படுத்தி அவதூறு செய்கின்றனர். இந்தியாவின் 20 கோடி முஸ்லீம்களை ஏனைய மக்களின் எதிரியாக மாற்றும் உள்நோக்கம் இதில் உள்ளது. இதனை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது. இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. தினசரி உழைப்பாளிகள் எப்படி ஊரடங்கை எதிர் கொள்வது என மலைத்து நிற்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என அறியப்படும் தாராவியில் முதல் வைரஸ் மரணம் நிகழ்ந்துள்ளது. இது என்ன விளைவுகளை உருவாக்கும் என்பதை எவரும் கணிக்க இயலாது. தப்ளிக் ஜமாத்தின் செயல், அது மிகவும் பொறுப்பற்றதாக இருந்தாலும், விளை வித்த ஆபத்தைவிட பெரிய ஆபத்தை தேசம் எதிர் நோக்கியுள்ளது. இந்த சமயத்தில் மதப்பிளவுகள் என்பது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் சங் பரிவாரம் அதனை உணருமா?