ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு இந்தியக் குடிமகனிடம் நீங்கள் எங்கெல்லாம், எதற்கெல்லாம் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள் என்று கேட்டால். நிச்சயமாக ரேஷன் கடைகள் மற்றும் ரயில் முன்பதிவு போன்ற இன்னும் சிலவற்றை கூறுவர். அதே கேள்வியை தற்போது ஒருவரிடம் கேட்டால் அவர் கூறக்கூடும் இடங்களில் நிச்சயம் ஏடிஎம் வாசலும் ஒன்றாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் மக்கள் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் காத்திருந்த ஒரு இடம் என்றால் அது ஏடிஎம் வாசல்தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் ஏடிஎம் வாசல்களில் இரவு பகலாக நின்றுகொண்டிருந்த காட்சிகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசைகள் என்பது தொடர்கதையாகவே உள்ளது. காரணம் தொடாச்சியாக ஏடிஎம் எண்ணிக்கைகள் மூடப்பட்டு குறைந்துகொண்டே வருவதுதான்.
ஏடிஎம்மின் பயன்பாடுகள் சாதாரணமானவை அல்ல, அது வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான தொடர்பை எளிமைப்படுத்தியது. ஒருவர் தன் வங்கி கணக்கிலுள்ள பணத்தை எடுக்க வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை மாற்றியது. தேவையான சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கித் தந்தது. அதன் பிறகு பணம் எடுப்பதற்கு மட்டுமல்லாமல் பணம் போடுவதற்கான வசதியும் அதிலேயே உருவாக்கப்பட்டது. மேலும் ஏடிஎம்கள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் வங்கிப் பணியாளர்களின் சுமையும் கணிசமாக குறைந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருவதை காரணமாகக் காட்டி ஏடிஎம்களைக் குறைக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், உண்மையான காரணம் ஏடிஎம்களை நிர்வகிப்பது பாதுகாப்பது அதன் செயல்பாட்டுக்கான மென்பொருள் அம்சங்களைத் தொடர்ந்து புதுப்பிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் அதிகமாகிக் கொண்டிருப்பதே ஆகும். மேலும் ஏடிஎம் சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைவு. இதனால் ஏடிஎம்களுக்கு மூடுவிழா நடந்து வருகிறது. வங்கிகள் ஏடிஎம்கள் படிப்படியாக மூடப்பட்டு வரும் செய்தி ஏடிஎம் தேடி அலையும்போது உணர்ந்துவிடுகிறார்கள். படிப்பறிவு உள்ள பிரிவினர் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனையின் வளர்ச்சியை முன்வைத்து ஏடிஎம்களை குறைப்பதால் படிப்பறிவு இல்லாத, தொழில்நுட்ப விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்கள்தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் என்னதான் பணமதிப்பிழப்பு (Demonization) ஜிஎஸ்டி எல்லாம் வந்தாலும் முறைப்படுத்தப்படாத சந்தை என்பது இந்தியா போன்ற 130 கோடி பேர் கொண்ட நாட்டில் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இதனால் ரொக்கப் பணப்பரிவர்த்தனைக்கான தேவையும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் எல்லோருமே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்களா என்ன? இன்னும் இங்கு ஏடிஎம் வசதிகளையே சுயமாகப் பயன்படுத்த தெரியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் நம் நாடு இன்னும் முழுமையான அளவில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மாறவில்லை. சொல்லப்போனால் ரொக்கப் பணப்பரிவர்த்தனையை முற்றிலுமாக நீக்குவது என்பது நடக்காத காரியம். புதிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், அது யாரையெல்லாம் பாதிக்கும் என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டியத் தேவையும் இருக்கிறது. முதலில் மாற்றங்களுக்கு ஏற்ப மக்களைத் தயார் செய்ய வேண்டும். பிறகுதான் மாற்றங்களைப் புகுத்த வேண்டும். செலவுகளைக் குறைப்பதற்காக ஏடிஎம்களை மூடும் வங்கிகள் ஏடிஎம்கள் இல்லையெனில் மீண்டும் மக்கள் வங்கிகளுக்குத்தான் படையெடுப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.