புதுதில்லி, ஆக. 5- ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில் அதிமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பகுஜன் சமாஜ்
மாநிலங்களவையில் இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதிஷ் சந்திரா கூறுகையில், ‘‘மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. 370-வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் காஷ்மீர் மாநிலம் தொடர்பான பிற மசோதாக்கள் அனைத்துக்கும் எங்கள் ஆதரவு உண்டு’’ என்றார்.
பிஜூ ஜனதா தளம்
பிஜூ ஜனதாதள கட்சி எம்.பி. பிரசன்னா ஆச்சார்யா பேசுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற உண்மையான உணர்வு இன்றுதான் உருவாகி யுள்ளது. எனவே எங்கள் கட்சி முழுமையாக மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் மாநிலக் கட்சியாக இருக்கலாம். ஆனால் நாடு தான் எங்களுக்கு முதன்மையானது’’ என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியும் மேன்மையும் நிலவும் என நாங்கள் நம்புகிறோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆதரவு
அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். இந்த சட்டம் தற்காலிகமானது என அரசியலமைப்பு சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதை நீக்கியதால் கவலைப்பட ஏதுமில்லை. ஜெயலலிதா நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவர் இருந்திருந்தால் ஆதரித்திருப்பார் என்றார்.