சென்னை, ஏப்.13- கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டு உறுதியுடன் வெல்வோம்; இதனால் ஏற்பட்ட துயரங்களையெல்லாம் கடந்து புதிய வாழ்வை படைக்கும் சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை வழக்கம் போல கொண்டாட முடியாத விதத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் ஊரடங்கில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தன்னலம் பாராமல் இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம். ஒரு உலகளாவிய நோய் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் முதலாளித்துவ அமைப்பு விழிப்பிதுங்கி நிற்கிறது.
கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட முதலாளித்துவம் மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்பதை இந்த நெருக்கடியான காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதே நேரத்தில் சோசலிச சமூகம்தான் மனிதர்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்ற உண்மையும் இன்று உரக்க உலகினால் பேசப்படுகிறது.
மனிதகுலம் கடந்த காலங்களிலும் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. அறிவியலின் மற்றும் பகுத்தறிவின் துணையோடு அதை முறியடித்து முன்னேறியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையும் எதிர்கொண்டு சமாளித்து முன்னேறும் என்று நம்பிக்கை கொள்வோம். இயற்கையோடு இயைந்த வாழ்வை பாதுகாப்போம். தமிழ் இலக்கியம், காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ள பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டை பாதுகாப்போம். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளின் சமத்துவத்தை பாதுகாக்கவும், மாநிலங்களின் உரிமைகளையும், அதிகாரங்களையும் பாதுகாக்கவும் பன்முக பண்பாட்டை உயர்த்தி பிடிக்கவும் இப்புத்தாண்டு நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.