தனியார் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பேர் பலி
செங்கல்பட்டு, அக். 4- செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கன்னியம்மாள் (65). இவர்களது மகள் திருமணமாகி காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் வசிக்கிறார். கிருஷ்ணன், கன்னியம்மாள் இருவரும் மகள் வீட்டிற்கு புதன்கிழமை சென்றனர். இந்நிலையில் கன்னியம்மாளுக்கு வியாழக்கிழமை நள்ளிரவு நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடி யாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதி யில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக அங்கே சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்கு மார் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட கன்னியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். ஆம்புலன்ஸ் உதவியாளர் தினகரன், கன்னியம்மாளின் மகள் சரஸ்வதி ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை
சென்னை, அக். 4- சென்னை அடுத்த துரைப்பாக்கம் ராஜ் நகர் முதல் தெருவில் வசிப்பவர் அயன்பாண்டியன் (76). தொழிலதிபரான இவர் வியாழக்கிழமை நண்பகல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் அனைவரும் இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 60 சவ்ரன் நகைகள், .5.50 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அயன்பாண்டியன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுனர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இக்கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.