tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

தொழிற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிடுக
வேலூர், ஜூன் 20- மாநிலம் முழுவதும் உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர்களின் காலிப்  பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் வேலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் காட்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத் தலை வர் எம்.வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் எம்.பாண்டுரங்கன் வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.ரங்கநாதன், பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அமைப்புச் செயலர் சோ.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழகம் முழுவதும் 17 வகையான பாடங்களுக்கு 2,144 முதுகலை ஆசி ரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்  நிரப்பப்படுவதுபோல், மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வரும் 12  வகையான தொழிற்கல்வி பாடங்களை போதிக்கும் 600 தொழிற்கல்வி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மாற்றுப்பாடத்தில் உயர்கல்வி தகுதிபெற்ற அனைத்து ஆசிரி யர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுவது போல், அனைத்து  தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.  மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழு பாடமுறைப்படி  தமிழகத்தில் 67 பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டம்  அறிமுகம் செய்திருப்பதுபோல், அதே தொழிற்கல்வி பாடத்திட்டத்தை மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாலாற்றில் மணல் எடுப்பதை எதிர்த்து போராட்டம்
வேலூர், ஜூன் 20- குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பாலாற்றில் உள்ள அரசு மணல் குவாரி யில் மணல் எடுப்பதற்கு தடைவிதிக்கக் கோரி மேல்விஷாரம் பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் மணல் எடுக்க பாலாற்றில் அரசு  சார்பில் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் ஆழ்துளைக் கிணறு கள் அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்  படுகிறது. தற்போது, வறட்சி காரணமாக பல இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் மணல் எடுக்க  தடை விதிக்க வலியுறுத்தி மேல்விஷாரம் பகுதி மக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு நகர  காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.