“கல்வியால் மட்டுமே சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும்”
வேலூர், மே 28-“கல்வியால் மட்டுமே சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்த்த வேண்டும்” என திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வருமான மரியா ஆண்டனிராஜ் கூறினார். குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 527 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில் இதனை தெரிவித்தார்.பல்கலைக்கழக தர வரிசையில் இடம் பிடித்த 13 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம் தலைமை வகித்தார். செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். துணை முதல்வர் மு.மேகராஜன் வரவேற்றார். முதல்வர் எம்.ஜெயஸ்ரீ ராணி ஆண்டறிக்கை வாசித்தார்.
அறிவியல் இயக்க புதிய நிர்வாகிகள் தேர்வு
வேலூர், மே 28-தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய ஆலோசனைக்குழு கூட்டத்திற்கு தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் தலைவராக நா.ஜனார்த்தனன், செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளராக ஆர்.லோகநாதன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநில அமைப்பின் முன்னாள் பொருளாளர் கு.செந்தமிழ்செல்வன் தேர்தல் அலுவலராக செயல்பட்டார். மாவட்ட துணைத்தலைவர் கா.விசுவநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பெ.ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.